பதிவு செய்த நாள்
24
செப்
2016
02:09
*கணவன், மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள். விட்டுக் கொடுத்து வாழுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
*கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், சேமிப்பதும் கருத்து வேறுபாடுக்கு இடம் தரும்.
*நானே பெரியவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.
*குடும்பத்தை நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும். எந்நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
*நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
*உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
*மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
*எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
*கேள்விப்படும் எல்லா விஷயத்தையும் நம்பாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
*உங்கள் கருத்தில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். மற்றவர் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.
*மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். புன்முறுவல் காட்டவும், அன்புச் சொற்களைப் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்.
*பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள்.
*அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். பிரச்னை ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.
*குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும். வீண் செலவுகளே குடும்ப அமைதியைக் கெடுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றைக் கடைபிடியுங்கள்.
*குடும்பத்தில் அனைவரும் அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
*பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமலும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.
*தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனம் தான் அதை தேர்ந்தெடுத்தது.
*மனத்துõய்மை, சுத்தமான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இவற்றுடன் கூடியதாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் உடல், மனம் இரண்டிலும் புத்துணர்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்.
*உண்மையில் மனிதனுக்கு எதிரி உண்டு என்றால் அது மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு உடலில் மட்டுமே வேலை செய்கிறது. ஆனால் எண்ணும் எண்ணமோ எங்கும் பாயும் ஆற்றல் கொண்டது. (மகான் வேதாத்ரி மகரிஷி)