வருஷநாடு: வைகை ஆறு உற்பத்தியாகும் வருஷநாடு மலைப்பகுதியில் மழை வேண்டியும், மாசில்லா வைகையாக மாற்றும் வகையில், மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மூலவைகையில் "வைகை வழிபாடு நடந்தது.
திருவேடகம் விவேகானந்த கல்லுாரி செயலர் சுவாமி நியமானந்த தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில் மழை பெய்ய வேண்டிய இடங்களில் பெய்யவில்லை; இதனால் அண்டை மாநிலங்களிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பிரார்த்தனை மூலம் எதையும் பெறலாம். மனம் ஒன்றிணைந்து, உருக்கத்துடன் வேண்டுதல் செய்தால் மழை பெய்யும். மழை பெய்யாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் பிரார்த்தனைகளும், மந்திரங்களும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான மழையை பெற்றுத்தரும் என்றார்.
சோமசுந்தரம் தலைமையில் சிவனடியார் மற்றும் விவேகானந்த கல்லுாரி மாணவர்களின் வழிபாடு நடந்தது. கங்கை உள்ளிட்ட 7 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் வைகை சுனையில் ஊற்றப்பட்டது; சிவாச்சாரியார் கார்த்திகேயசிவம் வழிபாடுகளை செய்தார். தாசில்தார் மணிமாறன், பெரியாறு வைகை வடிகால் கண்காணிப்பு பொறியாளர் முருகு சுப்பிரமணியம், சவுராஷ்டிரா குரூப் இன்ஸ்டிடியூஷன் தாளாளர் ஜவஹர்லால், பாரதிய கிஷான் சங்கம் அகில இந்திய பொதுச்செயலாளர் பெருமாள், வாலிப்பாறை கிராமத்தினர் பங்கேற்றனர்.
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய அமைப்பாளர் கோபிநாத் வரவேற்றார். வைகை நதி பாதுகாப்பு அமைப்பாளர் ஆதிசேஷன் நன்றி கூறினார். தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள் கண்ணன், சரவணன், ராஜேஷ்குமார், அஷ்வின் ஜெயகுமார், அருண் நாகேந்திரன் ஏற்பாடுகளை செய்தனர்.