பதிவு செய்த நாள்
03
அக்
2016
11:10
திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நவராத்திரி விழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. முன்னதாக, கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் கஜலட்சுமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நவராத்திரி விழாவை கோவில் தக்கார் ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். இந்த விழா, வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும், மாலை, 6:30 மணிக்கு உற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலிலும், நேற்று முன்தினம் இரவு நவராத்திரி விழா துவங்கியது. கோவில் வளாகத்தில் கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இக்கோவிலில், வரும், 13ம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவும், இசை கச்சேரி, பரத நாட்டியம் நடைபெறும். இதே போல், திருத்தணி, சேகர்வர்மா நகர் சக்தி வினாயகர் மற்றும் மடம் கிராமத்தில் உள்ள வன துர்க்கையம்மன் கோவில்களிலும் நவராத்திரி விழாவையொட்டி, வரும் 10ம் தேதி வரை, மாலை 6:30 மணிக்கு கொலு பொம்மைகளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெறும்.