பதிவு செய்த நாள்
07
அக்
2016
11:10
பரமக்குடி,: பரமக்குடியில் உள்ள அனைத்து பெருமாள், சிவன், அம்மன் கோயில்கள், வீடுகளில் கொலு அமைத்தும் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி, முப்பெரும் தேவியரை கொண்டாடும் வகையில் வீடுகளில் 9 படிகளை அமைத்து கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தியுள்ளனர். இதில், இயற்கை தொடங்கி ஓர் அறிவு உயிர் முதல் ஆறறிவு கொண்ட அனைத்து படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சவுந்தரவல்லித்தாயார், ஆண்டாள் நாச்சியாருக்கும், ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்பிகை, மீனாட்சி அம்மன், முத்தாலம்மன், பத்தினி அம்மன், துர்க்கை அம்மன், சந்தனமாரியம்மன், கவுரிஅம்மன், எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார், நயினார்கோவிலில் சவுந்தர்யநாயகி அம்மன், என 9 நாட்களும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இத்துடன் கோயில்களில் கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு, வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் பஜனை, கோலாட்டம் என கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.