பதிவு செய்த நாள்
24
அக்
2016
10:10
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் புயலில் சேதமடைந்த விநாயகர் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும், என இந்து அறநிலைத்துறை ஆணையர் வீரசண்முகமணி தெரிவித்தார்.நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஆணையர் வீரசண்முகமணி, அக்னி தீர்த்த கரையில் 1.21 கோடி ரூபாயில் அமையவுள்ள சங்கல்ப மண்டபம், தோரண வாயில் படிக்கட்டு மாற்றியமைத்தல், புதிய சிமென்ட், பேவர் பிளாக் சாலை அமையும் இடத்தை ஆய்வு செய்தார். கோயிலுக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு, திருப்புல்லாணி கோயில் மற்றும் தனுஷ்கோடியில் சேதமடைந்த விநாயகர் கோயிலை ஆய்வு செய்து, கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
ஆணையர் வீரசண்முகமணி கூறியதாவது: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அக்னி தீர்த்த கடலில் சங்கல்ப பூஜைக்கு தனி மண்டபம் அமைக்கப்படும். ரதவீதியில் கழிப்பறை, குடிநீர் வசதி, நிழற்குடை மற்றும் கூடுதல் பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்படும். கோயிலுக்குள் கூட்ட நெரிசலை தவிர்க்க, ஆன்மிக முறைப்படி தீர்த்தங்கள் மாற்றியமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கோயில் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும். 1964ல் தனுஷ்கோடி புயலில் சேதமடைந்த விநாயகர் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். சென்னை மாங்காடு கருமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிந்ததும், கும்பாபிஷேக தேதி விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.