பதிவு செய்த நாள்
26
அக்
2016
12:10
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகள், அத்துமீறி நடந்து கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, 1,000 ஆண்டுகள் பழமையான சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஓசூர் நகரின் மையப் பகுதியில் மலைக்கோவில் அமைந்துள்ளதால், இங்கிருந்து நகரின், நான்குபுறமும் அழகை ரசிக்கலாம். இந்த கோவிலில் காளிகாம்பாள் சன்னதியும் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம், வெகுவிமர்சையாக கோவில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். தினமும், மூன்று வேளை பூஜை நடப்பதால், வாரம் முழுவதும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். வாரத்தில் திங்கட்கிழமை மட்டும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பிரசித்த பெற்ற இந்த கோவிலில், கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளின் செயல் அருவறுக்கத்தக்க வகையில் உள்ளது. தினமும் காலையில் கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகள், கோவில் பூங்காவில் அமர்ந்து, பக்தர்கள் இருப்பதை கூட கண்டு கொள்ளாமல், காதல் சரசங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் குடும்பத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், காதல் ஜோடிகளில் நடவடிக்கைகளை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். காதல் ஜோடிகளின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். கோவிலின் புனிதத்தை காப்பாற்றவும், காதல் ஜோடிகளின் அத்துமீறலை தடுக்கவும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.