பதிவு செய்த நாள்
28
நவ
2016
11:11
கீழக்கரை: ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மரகதநடராஜர் சன்னதியில் நுாற்றாண்டு காலமாக ஸ்படிக, மரகத லிங்க பூஜை நடந்து வருகிறது. பச்சை மரகத நடராஜர் சன்னதி முன்புற மண்டபத்தில் பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை (நித்ய காலம்) நடக்கிறது. பாதுகாப்பாக உள்ள பெட்டியின் மூலம் ஸ்படிக, மரகத லிங்கத்தை பீடத்தில் வைத்து, பால், தயிர், பன்னீர், தேன், அன்னம், விபூதி, சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஸ்தானிக சிவாச்சாரியார் ஒருவர் கூறுகையில், பல நுாற்றாண்டு காலமாக நடந்து வரும் நித்ய பூஜையில் வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விஷேச பூஜையில் பங்கேற்பதற்காக வந்து செல்கின்றனர். மரகத நடராஜருக்கு செய்யும் அபிஷேகத்தை, ஸ்படிக, மரகத லிங்கம் வாயிலாக நிறைவேற்றப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் தவிர 364 நாட்களும் மகா அபிஷேகம் லிங்கத்திற்கு செய்யப்பட்டு வருகிறது. பிற்பகலில் வழங்கப்படும் வெள்ளை சோற்றை உண்பதற்காக ஏராளமான காக்கைகள், கூடுவது வழக்கம். வியாசர் பகவான் பகல்பொழுதில் மறைபொருளாக வருவதாக ஐதீகம் உள்ளது, என்றார்.