பதிவு செய்த நாள்
28
நவ
2016
10:11
காங்கேயம்: கறுப்பு பணம் மீட்கப்படுவது குறித்து, சிவன்மலை ஆண்டவர் அன்றே சொன்னார் என, வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டவர் உத்தரவு பெட்டி உள்ளது. முருக பெருமானே, பக்தர்களின் கனவில் தோன்றி, எந்த பொருளை வைக்க வேண்டும் என, உத்தரவிடுவார். அப்பொருள், பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும். இந்த பொருள், அடுத்த உத்தரவு வரும் வரை பெட்டியில் இருக்கும். பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒருவிதத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது, பக்தர்கள் நம்பிக்கை.துப்பாக்கி தோட்டா வைக்கப்பட்டபோது, கார்கில் போர் ஏற்பட்டது. மண் வைத்தபோது, ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்துக்கு போனது.
தண்ணீர் வைத்தபோது, சுனாமி ஏற்பட்டது. சர்க்கரை வைத்தபோது, கரும்பு விலை வீழ்ச்சியடைந்தது. பால் வைத்தபோது, உற்பத்தி அதிகரித்து, பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். இதன்படி, 2015 அக்., 10ல், உத்தரவு பெட்டியில், கணக்கு நோட்டு புத்தகம் வைக்கப்பட்டு, ஜனவரி, 9 வரை, 90 நாட்கள் பெட்டியில் இருந்தது. இதனால், கறுப்பு பணம் மீட்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கறுப்பு பணத்தை ஒழிக்க, ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து, சிவன்மலை ஆண்டவர் அன்றே சொன்னார் என, வாட்ஸ் ஆப்பில், தகவல் பரவி வருகிறது.