பதிவு செய்த நாள்
28
நவ
2016
11:11
நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம், அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், புதிய தேர் வெள்ளோட்டம், நேற்று நடந்தது. நுங்கம்பாக்கம், வடக்கு மாட வீதியில், 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலில், தேர் இல்லாத காரணத்தால், நுங்கம்பாக்கம் பெருமாள் கோவில், கபாலீஸ்வரர் கோவில் பிள்ளையார் மற்றும் முருகர் தேரை பயன்படுத்தி வந்தனர். அதையடுத்து, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 32 அடி உயரத்தில், புதிய தேர் உருவாக்கும் பணிகள் நடந்தன. பணிகள் முடிந்த நிலையில், புது தேர் வெள்ளோட்டம், நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, நேற்று காலை, அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை நடந்தது; தொடர்ந்து, 8:30 மணிக்கு, புது தேர் வெள்ளோட்டம் நடந்தது. புதிய தேர், மாவிலை, வாழை மரங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, புதிய கலசம் வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள், அரோகரா பக்தி முழக்கத்துடன், தேரை வடம் பிடித்து, இழுத்து சென்றனர்.