சபரிமலை பெயர் மாற்றம்: தந்திரிகள் சமாஜம் வரவேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2016 05:11
சபரிமலை: சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள முடிவை தந்திரிகள் சமாஜம் வரவேற்றுள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்காக தாக்கல் செய்யப்பட்ட தஸ்தா வேஜூகளில் சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில் என்று உள்ளது. தர்ம சாதஸ்தா திருமணமானவர் என்பதால் வழக்கில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதிய தேவசம்போர்டு, ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என்பதை சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் என்று பெயர் மாற்றம் செய்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வரும் நிலையில் அகில கேரள தந்திரிகள் சமாஜம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற அவசர கூட்டத்துக்கு பின்னர் தலைவர் பேராசிரியர் வி.ஆர். நம்பூதிரி கூறியதாவது: ஆயிரக்கணக்கான தர்ம சாஸ்தா கோயில் இருக்கலாம். ஆனால் சபரிமலையில் இருப்பது மட்டுமே ஸ்ரீ ஐயப்பன் கோயில். இங்குள்ள பிரதிஷ்டை சங்கல்பம், தியான நிலை வேறு எந்த கோயிலிலும் பார்க்க முடியாது. யோகபட்டாசனத்தில் இருக்கும் ஐயப்ப சுவாமி, பரமசிவன் சங்கல்பமான பிங்களாநாடியும், மகா விஷ்ணு சங்கல்பமான இடநாடியும் சேர்ந்த சங்கல்பம்தான் சபரிமலையில் உள்ளது. சின்முத்ரா சங்கல்பமான ஜீவாத்மாவும், பரமாத்மாவும் தம்மில் ஒன்று படும் பரமமான சங்கல்பம் சபரிமலை ஐயப்பன். இந்த தத்துவங்கள் அனைத்தும் ஒருங்கே பெற்றது ஐயப்பன் மட்டும்தான். அதனால்தான் சபரிமலை கோயிலக்கு ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் என்று பெயர் ஏற்படுத்தியதை தந்திரி சமாஜம் வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.