சபரிமலை: சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ஆகாய மார்கத்திலும் கண்காணிப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு சீசன் தொடக்கத்திலேயே சபரிமலைக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது என்று மத்திய அரசு மாநில அரசை எச்சரித்துள்ளதால் தொடக்கம் முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள போலீசின் சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பு கமாண்டோக்களுடன் மத்திய அதிவிரைவு படை வீரர்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாளை முதல் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹெலிகாம்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை முதல் இவை ஆகாயத்தில் பறக்க விடப்பட்டு கண்காணிக்கப்படும். இதுபோல பம்பை முதல் சன்னிதானம் வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பம்பை மற்றும் சன்னிதானம் கட்டுப்பாடு மையங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. சன்னிதானத்தில் மட்டும் தற்போது 1300 போலீசார் பணியில் உள்ளனர்.நாளை முதல் சபரிமலையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் சபரிமலையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். டிச.5,6 தேதிகளில் தரிசன முறைகளில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும். கேரள போலீஸ் ஏடிஜிபி நிதின் அகர்வால் சன்னிதான பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.