பதிவு செய்த நாள்
29
நவ
2016
12:11
விருத்தாசலம்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில், கொல்கத்தாவில் இருந்து பல வண்ண விளக்குகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. கார்த்திகை தீப திருவிழாவின் போது, வீடுகள், கோவில்கள், அலுவலகங்கள், கடைகள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதற்காக, களிமண்ணில் அகல் விளக்குகள் தயாரித்து, சூளையில் சுட்டு வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. நாளடைவில் மண்பாண்ட தொழில் நலிவடைந்து, களிமண்ணில் விளக்குகள் தயாரிப்பது குறைந்தது.
இந்நிலையில், வரும் டிசம்பர் 12ம் தேதி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் பொது மக்களை கவரும் வகையில், பல வண்ணங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள தொழிற் கூடங்களில் அகல் விளக்குகள் உற்பத்தி பணி தீவிரமாக நடக்கிறது. இருப்பினும், இந்தாண்டு தீப திருவிழாவிற்காக, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இருந்து கண்ணை கவரும் வகையில் புதுப்புது டிசைன்களில், பல வண்ண அகல் விளக்குகள், விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதில், ஒரு முகம், ஐந்து முகம், ஏழு, ஒன்பது, பதினோறு முகங்களுடன்; மயில், அன்னம், இலைகள் மற்றும் விநாயகர், அம்மன் போன்ற சுவாமிகள் உருவத்தில் கண்ணைக் கவரும் வண்ணங்களில் விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தீப திருவிழாவிற்கு அகல் விளக்குகள் வாங்க வரும் பொது மக்களை தற்போது விற்பனைக்கு வந்துள்ள கொல்கத்தா ரக விளக்குகள் அதிகம் கவர்ந்துள்ளன. இது குறித்து பொம்மை கம்பெனி வியாபாரி சதாசிவம் கூறுகையில், ‘இந்தாண்டு புது வரவாக கொல்கத்தாவில் இருந்து புது டிசைன்களில் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு முக விளக்குகள் 7, 30 மற்றும் 50 ரூபாய்க்கும், 5 முகம் 50 ரூபாய்க்கும், 7 முகம் 65 ரூபாய்க்கும், 9 முகம் 60 ரூபாய்க்கும், 11 முகம் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது’ என்றார்.