பதிவு செய்த நாள்
29
நவ
2016
12:11
திருப்பூர்: திருப்பூரில், ஆக்கிரமிப்பில் இருந்த, 60 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம் அதிரடியாக, நேற்று மீட்கப்பட்டது. திருப்பூர், மண்ணரை பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 6.72 ஏக்கர் நிலம், கருமாரம்பாளையத்தில் உள்ளது. இதை, அதே பகுதியை சேர்ந்த, முத்துலட்சுமி, பகவதி ஆகியோர், பல ஆண்டுகளாக நிலத்தை ஆக்கிரமித்து, வீடு மற்றும் பிரிண்டிங் கம்பெனிக்கு குடோன் அமைத்து, வாடகைக்கு விட்டிருந்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தை காலி செய்யாததால், நேற்று அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்று நிலத்தை மீட்டனர். நிலத்தை சுற்றிலும், கோவிலுக்கு சொந்தமான நிலம் என, அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. அந்த இடத்தில், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, இரண்டு வீடுகள், பிரிண்டிங் குடோன் ஆகியவை, இடித்து அகற்றப்பட்டன. அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில், ‘திருப்பூர், மண்ணரை கிராமம், கருமாரம்பாளையத்தில், சர்வே எண், 270ல் உள்ள, 6.72 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமித்து, வீடு, குடோன் கட்டியிருந்ததோடு, ஆவணங்களை மாற்றவும் முயற்சித்துள்ளனர். இது குறித்து நீதிமன்றம் மற்றும் இணை ஆணையர், ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தும், உரிய நோட்டீஸ் வழங்கியும், கோவிலுக்கு நிலத்தை ஒப்படைக்கவில்லை. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மீட்கப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு, 60 கோடி ரூபாய்’ என்றனர்.