அக் ஷய கேந்திரா மையங்களில் பக்தர்கள் பணம் பெறும் வசதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2016 01:11
சபரிமலை: ஐயப்ப பக்தர்கள் ஏ.டி.எம்., கார்டுகள் பயன்படுத்தி பணம் பெற கேரள அரசின் ஆன்லைன் திட்டங்களை மக்களுக்கு வழங்கும் நிறுவனமான அக் ஷய கேந்திரா மூலம் இரண்டாயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.சபரிமலை வரும் பக்தர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க சிரமப்படுகின்றனர். சபரிமலையில் இ-காணிக்கை, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பிரசாதம் பெறும் வசதி போன்றவற்றை தேவசம்போர்டு ஏற்படுத்தியுள்ளது. தனலெட்சுமி பேங்க் கூடுதல் ஏ.டி.எம்., சென்டர்களை தொடங்கியுள்ளது. எனினும் பக்தர்கள் வரும் பாதையில் பக்தர்கள் பணம் எடுப்பதில் சிரமம் உள்ளது.இதை தொடர்ந்து சபரிமலை வரும் பாதைகளில் கேரள அரசின் அக் ஷய கேந்திரா மையங்களில் பக்தர்களுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பக்தர்கள் ஏ.டி.எம்., கார்டுடன் இந்த மையங்களுக்கு சென்றால் 2,000 ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும். ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூருடன் இணைந்து இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பத்தணந்திட்டை- பம்பை ரோட்டில் பத்தணந்திட்டை பக்தர்கள் இடை தங்குமிடம், வடசேரிக்கரை, மாடமண், மஞ்சும்குழி, ளாகா ஆகிய இடங்களிலும், பொன்குன்றம்- எருமேலி ரோட்டில் மூன்று இடங்களிலும் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.