பதிவு செய்த நாள்
02
டிச
2016
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து, பஞ்ச மூர்த்திகள், கோவில் தங்க கொடி மரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அப்போது, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க, சுக்லபட்ச சதுர்த்தி திதி, உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில், காலை, 7:15 மணிக்கு மேல், 8:30 மணிக்குள், தனூர் லக்னத்தில் கொடியேற்றம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கோவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 9ல் பஞ்ச மூர்த்திகள் தனித்தனி தேரில் வீதி உலா வரும் மஹா ரத தேரோட்டம் நடக்கிறது. 12ல் அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.