முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வந்த அ.தி.ம.க., வினர் பலர், முதல்வர் ஜெ., இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக மாலையை கழற்றி விரதத்தை முறித்துக்கொண்டனர். மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் கோவிந்தராமு, மாவட்ட மாணவரணி துணை தலைவர் அழகுமுத்து அரியப்பன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாடசாமி, விவசாய அணி செயலாளர் அழகர்சாமி, இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்தனர். முதல்வர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அனைவரும் மாலையை கழற்றி விரதத்தை முறித்துக்கொண்டு சென்னை சென்றனர். மேலும் முதுகுளத்துார், கடலாடி, அபிராமம் பகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க., தொண்டர்கள் பலர் ஜெ., படத்தின் முன் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.