பதிவு செய்த நாள்
08
டிச
2016
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கட்டண தரிசன டிக்கெட் விற்பனை எப்போது என, தகவல் தெரிவிக்காமல், பக்தர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில் நாளை (நவ.,9) பஞ்ச மூர்த்திகள் மஹாரத தேரோட்டமும், வரும் டிச., 12ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதில், மஹா தீபத்தன்று கோவிலுக்குள் பஞ்ச மூர்த்திகள் தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் நடனத்துடன் ஒருங்கே மஹா தீபத்தை காணவும், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் ஏற்றப்படும் பரணி தீபத்தை காணவும், லட்சக்கணக்கானோர் போட்டி போடுவர். இதற்கு அனுமதி பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதில் பரணி தீபத்திற்கு, 500 ரூபாய் டிக்கெட், 500 எண்ணிக்கையிலும், மஹாதீபத்திற்கு, 500 ரூபாய் டிக்கெட், 1,000 எண்ணிக்கையிலும், 600 ரூபாய் டிக்கெட், 100 எண்ணிக்கையிலும் விற்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக டிக்கெட் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளது. ஆனால் இந்த டிக்கெட் எப்போது விற்பனை செய்யப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவிக்காமல், பக்தர்களை அலைக்கழித்து வருகிறது. இந்த டிக்கெட் பிளாக்கில் விற்பனை செய்ய மறைக்கப்படுகிறதா என, பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு, ஒரு டிக்கெட், பிளாக்கில், 2,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை கோவில் ஊழியர்கள் விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்து, அவர்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கட்டளை தாரர்கள், உபயதாரர்கள், சுவாமி தூக்குபவர்கள், கோவில் சிறப்பு பணியாளர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள், என, 7,000க்கும் மேற்பட்டோர், கோவில் நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டு, உள்ளே இலவசமாக அனுமதிக்கப்படுவர்.