பதிவு செய்த நாள்
08
டிச
2016
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், சோடியம் மின் விளக்குகளை, எல்.இ.டி., மின் விளக்குகளாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதி கருதி, கிரிவலப்பாதை முழுவதும், 14 கி.மீ., தூரம், 155 மின் கம்பங்களில் சோடியம் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. தற்போது மின் சேமிப்பு கருதி, இவற்றை, எல்.இ.டி., பல்புகளாக மாற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதில், 125 விளக்குகளை நிப்போ கோல்ட் நிறுவனமும், 30 விளக்குகளை சாந்திமலை டிரஸ்ட் நிறுவனமும் மாற்றி தர ஒப்புதல் அளித்தது. அதன்படி நேற்று, 155 சோடியம் மின் விளக்குகளும், எல்.இ.டி., பல்புகளாக மாற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.