பதிவு செய்த நாள்
10
டிச
2016
12:12
அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம் சார்பில், திருப்பூரில் உள்ள கோவில்களில், 63ம் ஆண்டு மார்கழி மாத சிறப்பு பாராயண வழிபாடு, வரும், 16ல் துவங்குகிறது.
மார்கழி மாதத்தில் சிறப்பு பாராயண வழிபாடுகள், கோவில்களில் நடத்தப்படுகிறது. மார்கழி முதல் நாளான, வரும், 16ம் தேதி முதல், தை முதல் நாள் ஜன., 14ம் தேதி வரை, பாராயண நிகழ்வுகள், தினமும் காலை, 5:30 மணி முதல் நடைபெற உள்ளது. குலாலர் விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி, திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் திருவெம்பாவை நிகழ்ச்சி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் திருப்பாவை வழிபாடுகளும் நடைபெறுகிறது.
ஜன., 2 முதல், 10ம் தேதி வரை, திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில், ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருவெம்பாவை உற்சவம் நடக்க உள்ளது. ஜன., 10ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாணம்; 11ம் தேதி, அதிகாலை, 3:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. காலை, 6:00 மணிக்கு, ஈஸ்வரன் கோவிலில் ஆருத்ரா தரிசனம், தொடர்ந்து நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. பெருமாள் கோவிலில், 8ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், 11ம் தேதி, கூடாரவல்லி உற்சவமும் நடைபெற உள்ளது.