கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று மரகத நடராஜரை தரிசித்தனர். உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழியில் திருவாதிரை திருவிழா, 10 நாட்கள் நடப்பது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நடராஜர் சன்னிதியில் பச்சை மரகத நடராஜர் திருமேனியில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நேற்று அதிகாலை அருணோதய நேரத்தில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அபூர்வ தரிசனத்தை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இரவு, 9:30 மணிக்கு மாணிக்கவாசகருக்கு பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சி, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.