பதிவு செய்த நாள்
19
ஜன
2017
05:01
புதியதாக எதைச் செய்தாலும் முதலில் விநாயகர் வழிபாடு முக்கியமல்லவா? எனவே கணபதியை வணங்கி, அவரைப் பற்றி தியானித்து வணங்குகின்றனர். மற்ற எல்லா தெய்வ வழிபாட்டைக் காட்டிலும் மிக எளிய முறையில் வழிபட ஏதுவானது கணபதி வழிபாடு என்பதோடு அல்லாது, இவரை வழிபட்டால் எல்லா தெய்வங்களையும் அவ்வழிபாடு போய்ச் சேரும் என்பது சிறப்பு. கணபதி ஓம்கார ஸ்வரூபமானதால், அவருக்குச் செய்யும் வணக்கமும் ஸ்தோத்திரமும் பிரம்மத்தையே சேருவதால், விநாயக வணக்கம் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். விநாயகரை எல்லோருக்கும் தெரியப்படுத்தி மிக நெருங்கி எங்கும் சிறு குக்கிராமத்திலும் கூட உண்டாக்கி, குழந்தைகளை மகிழ்வித்து, நம்மையெல்லாம் குழந்தைச் சாமியான பிள்ளையாரிடம் ஈடுபட வைத்த பெருமை ஔவைப் பாட்டியையே சாரும். இவர் விநாயகரின் முதல் தரமான பக்தை. விநாயகரும் பாட்டிக்கு அளவு கடந்த சக்தியை (யானை பலம்) அளித்ததால் பாட்டியானாலும் ஒவ்வொரு கிராமமாய் ஓடிச் சென்று பிள்ளையாரை அரசமரத்தடியில் உட்கார வைத்து, குழந்தைப் பருவத்திலேயே, நம்முன்னோர்களை இவர் வழிபாட்டில் ஈடுபட வைத்துவிட்டார்.
ஔவையார் இயற்றிய விநாயகர் அகவலைப் யாரொருவர் தினமும் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொண்டு இருகைகளையும் மாற்றிக் காதைப்பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு பக்தியுடன் ஓதினாலும், இந்த உலக இன்பம் அனைத்தும் பெற்று மகிழ்வதோடு, யோக சித்தியும் தானாகவே உண்டாகி இறைவனடி சேர்வர். இது திண்ணம். இவரை அருகம்புல் கொண்டு தப்பாமல் வணங்கினாலும், முக்கண்ணுடைய தேங்காய் சிதறும்படி உடைத்தாலும், அவருக்குப் பெரிய வயிறு, தொப்பையப் பன் என்று பாவித்து நிறையத் தின்பண்டங்கள், பழங்கள், கொழுக்கட்டை, பானகம் படைத்து பக்தி செய்தாலும் ஏற்றருள் புரியும் ஏற்றமிகு எளிய கடவுள் நம் விநாயகர். இவரை வழிபடும் சமயமானது காணாபத்யம் என்றழைக்கப்படும். இந்த விநாயகர் வழிபாடானது இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானதல்ல. இவ்வுலகில் இவரை மற்ற தேசங்களில் பின்வரும் பெயர்களில் வழிபடுகின்றனர்.
சீனாவில் - க்வான் ஹிடியாக்
ஜப்பானில் - வினாயக்ஷா - க்வான்ஷன்ஹே
பர்மாவில் - மகாபினி
கம்போடியாவில் -ப்ராகணேஷ்
மங்கோலியாவில் - தோத்கார் - அவுன்கான்.
கணேச பூஜையும், காரிய சித்தியும்:
நம் மனதில் தோன்றிய எண்ணங்கள் முழு உருப்பெறவும், காரியங்கள் இடரின்றி நிறைவேறவும், மனசஞ்சலத்திலிருந்து விடுபட்டு நிம்மதி பெறவும், வாழ்வில் முன்னேறவும் இவரை வழிபட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோமாக!
ஓம்கார ரூபத்தின் உறைவிடமாகி, ஆனந்தத்தின் இருப்பிடமாய் உள்ள விநாயகப் பெருமான் ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானையும், கேது கிரஹத்தையும் ப்ரீதியான கிரஹங்களாக்கிக் கொண்டார்.
வார நாட்களில் செவ்வாய் கிழமையும், சனிக்கிழமையும், அமாவாசை/பவுர்ணமிக்கு 4-ம் (சுக்லபக்ஷ) சதுர்த்தியும் இவருக்கு உகந்த நாட்களாகும்.
பூஜை செய்யும் முறை: மரப்பலகையில் செவ்வாய் கிரஹத்திற்குரிய கோலமிட்டு அதன்மேல் விநாயகர் படத்தையோ, அல்லது அவரவர் இல்லத்திலுள்ள விக்ரஹத்தையோ வைத்து விக்ரஹம் இல்லாதவர், மஞ்சள் பொடியை நீரைவிட்டுப் பிசைந்து, மஞ்சளால் விநாயகர் பிடித்து வைத்து இரு புறங்களிலும் தீபமேற்றி பூஜை ஆரம்பிக்க வேண்டும்.
விநாயகருடைய விரதங்கள்: வெள்ளிக்கிழமை, சதுர்த்தி, மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் உபவாசம் இருந்து இவரை வழிபட வேண்டும். ஆவணி வளர்பிறை சதுர்த்தி மிகவும் சிறந்தது. விரத நாளில் விநாயகர் திருக்கோயிலுக்குச் சென்று நெய்தீபம் இட்டு அருகம்புல் சாத்தி வலம் வந்து குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபாடு புரியலாம். விநாயகருக்கு துளசி சாத்துதல் கூடாது.
காரிய சித்திமாலை: இந்நூலை நாள் தோறும் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் பாடுவோரின் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எட்டு நாள் பாடினால் மன மகிழ்ச்சி தரக்கூடிய நன்மைகளைப் பெறுவார்கள். சதுர்த்தி விரத நாளன்று எட்டுமுறை பாடினால் அஷ்டமாசித்திகள் என்னும் எண்வகை சக்திகளும் கைகூடும். இரண்டு மாதங்களுக்கு நாள்தோறும் பலமுறை பாடினால் அரசாங்க நன்மைகள் கிட்டும். இரண்டு மாதங்களுக்கு தினமும் இருபத்தியோரு முறை பாடுவோர் அரசாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், வேலையாட்கள் ஆகிய எண்வகை செல்வங்களையும் அடைந்து மகிழ்வார்கள்.
கடன் பிரச்சனைகள் தீர: பிள்ளையார் கோயிலுக்கு வெள்ளிக்கிழமையன்று சென்று, தேங்காய் உடைத்து, அந்த இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு விளக்கேற்றி வரவேண்டும். இதுபோல் ஐந்து வெள்ளிக்கிழமைகள் செய்து, கடைசி நாள் அன்று சில ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கடன் பிரச்சனை தீரும். இதேபோல் பிள்ளையாருக்கு ஏழு செவ்வாய்க்கிழமைகளில் அரளிமாலை அல்லது செந்நிறப் பூக்களைச் சாற்றி வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து பிள்ளையார் கோயிலுக்குச் சென்று அருகம்புல் சாற்றி பிள்ளையாரை வழிபட்டால் நமது சங்கடங்கள் யாவும் நீங்கும். பிள்ளையாருக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் சூரைத் தேங்காய் உடைத்தால், நம்மேல் உள்ள திருஷ்டிகள் யாவும் அகலும். இதுபோல், ஔவையார் எழுதிய விநாயகர் அகவல் என்ற ஸ்லோகத்தைத் தினமும் படித்து வந்தால் கேது கிரஹத்தால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
விநாயக காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
மேற்கண்ட விநாயக காயத்ரி மந்திரத்தை ஜபித்தும் இவரைப் பூஜிக்கலாம். இறுதியாக நாம் வாழ்வில் அமைதியடைய ஆண்டவனிடம் சரணடைய வேண்டும். அதற்கு முதற்படியாக, விநாயகர் வழிபாடு நமக்குத் துணையாக என்றும் நிற்கும். எனவே, நாம் அவருடைய பாதம் பணிந்து எல்லா நலனும் அடைவோமாக.