பதிவு செய்த நாள்
27
பிப்
2017
11:02
சேலம்: சேலத்தில், மாசி அமாவாசை மயான கொள்ளை திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடு, கோழிகளை கடித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசி அமாவாசை நாளில், சேலத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்து, அம்மன் விக்ரகங்கள், சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டு, மயான கொள்ளை எனப்படும் பூஜைகள் நடத்தப்படும்.இதன்படி, சேலம், காக்காயன் சுடுகாடு, செவ்வாய்ப்பேட்டை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுடுகாடுகளில், நேற்று காலை, 11:00 மணி முதல், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேளதாளம் முழங்க, பெரியாண்டிச்சி அம்மன் விக்ரகங்களுடன், பல்வேறு வேடங்கள் அணிந்து, கழுத்தில், ஆடு, கோழி குடல்களை அணிந்தபடியும், மண்டை ஓட்டை கவ்வியும், ஆக்ரோஷமாக பக்தர்கள் ஆடி வந்தனர்.அருள் வந்து ஆடியவர்கள் வாய்களில், கோழிக்குஞ்சுகள், ஆட்டு குட்டிகள் ஆகியவற்றை திணித்தனர். அவற்றை, ரத்தம் சொட்ட சொட்ட கவ்வியபடி, சுடுகாடு நோக்கி படையெடுத்தனர். அப்போது, பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், குழந்தைகள் என, திரளான மக்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சாலையில் படுத்தனர். அவர்களை தாண்டி சென்று, அருள் வந்து ஆடியவர்கள் ஆசி வழங்கினர். காக்காயன் சுடுகாட்டில், 3, 5 வயதுடைய இரு சிறுமியர், வேடம் அணிந்து, நாக்கை வெளியே துருத்தியபடி, ஆடி வந்தனர். ஏராளமான பக்தர்கள், அவர்கள் காலில் விழுந்து, ஆசி பெற்றனர்.சேலம் மாவட்ட சுடுகாடுகளில், 10 ஆயிரம் கோழி குஞ்சுகள், 2,000 ஆட்டு குட்டிகளை கடித்து, ரத்தம் குடிக்கப்பட்டது. மாலை, 4:00 மணி வரை, அனைத்து சுடுகாடுகளிலும், இந்நிகழ்ச்சி நடந்தது.இதேபோல, வேலுார், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும், இத்திருவிழா கோலாகலமாக நடந்தது.