வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா நாளை தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2017 01:03
நாகர்கோவில்:வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று வடிவீஸ்வரம் அழகம்மன் சசமேத சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு அண்மையில் தினமலர் சார்பில் புதிய ராஜகோபுரம் கட்டிக் கொடுக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று மாசி திருவிழா.இந்த ஆண்டு விழா நாளை காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரி மூர்த்திகளின் வாகன பவனி நடைபெறுகிறது. 9ம் நாள் விழாவான பத்தாம் தேதி காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11ம் தேதி இரவு 8.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் ஆராட்டுத்துறையில் இருந்து பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா நடைபெறும் பத்து நாட்களிலும் மாலை 6.30 முதல் இரவு 10 மணி வரை கோயில் எதிரே அமைந்துள்ள தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் தேவம்போர்டு இணை ஆணையர் பாரதி மேற்பார்வையில், அகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் பக்த சேசவா சங்கம் செய்துள்ளது.