பதிவு செய்த நாள்
25
மார்
2017
11:03
ஆத்தூர்: ஓமலூர் அருகே, 13ம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்துடன் கூடிய துர்க்கை சிற்பத்தை, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்துள்ளனர். சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் வெங்கடேசன், கலைச்செல்வன் உள்ளிட்ட குழுவினர், ஓமலூர், கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் சாலையோரம் இருந்த கல்வெட்டு குறித்து, ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கி.பி., 1,230ல், மூன்றாம் ராஜராஜனின், 14வது ஆட்சியில் இருந்த கல்வெட்டின் ஒருபுறம் துர்க்கை உருவம், மறுபுறம் எழுத்துகள் உள்ளன. துர்க்கை சிற்ப மேற்பகுதியில், வலதுபுறம் கோழி, இடதுபுறம் பறவை, பிறை நிலா உள்ளது. தலைக்கு மேல் குடை, இருபுறமும் வெண்சாமரம், கீழ்புறம் சிங்கம், குத்துவிளக்கு, நான்கு கைகள், இடதுகையில் வில் உள்ளது. 15 வரிகளுடன், 110 செ.மீ., உயரம், 95 செ.மீ., அகலத்தில் கல்வெட்டு உள்ளது. மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில், வீரசோழ மண்டலத்தில், பூவாணிய நாட்டை ஆட்சி செய்யும் ஏழுகரை நாட்டு இடங்கை மாசேனையினருக்கு, அத்தானி நல்லூர் என்ற ஊரின் நில வரி வருவாயில், ஐந்தில் ஒரு பங்கு, அந்த நிலப்பகுதியில் உள்ள மேல்நோக்கிய மரம், கீழ் நோக்கிய கிணறை தானமாக கொடுத்துள்ளனர். பூவாணிய நாடு என்பது, தற்போதைய ஓமலூர், தாரமங்கலம், பென்னாகரம் பகுதிகள். ஏழுகரை நாடு என்பது ராசிபுரம். மாசேனை என்பது மிகப்பெரிய படைப்பிரிவு மற்றும் அதன் தலைமையை குறிப்பிடுகிறது. அத்தானிநல்லூர் என்பது, ராசிபுரம் அருகே உள்ள, அத்தனூராக இருக்கலாம். 11 முதல், 19ம் நூற்றாண்டு வரை, தமிழக சமுதாய அமைப்பில் வலங்கை, இடங்கை என, இரு பெரும் பிரிவுகள் இருந்தன.
வலங்கை, இடங்கை பிரிவுகளில், தலா, 98 ஜாதிகள் இருந்தன. ஆனால், கல்வெட்டில் வரும் இடங்கை பிரிவில், 99 ஜாதிகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளன. இரு பிரிவுகள், அதிகார அமைப்புக்கு எதிராகவும், அதிக வரி விதிப்புக்கு எதிராகவும் போராடியுள்ளன. சாலியர் முதல், வாணியர் வரை, இடங்கை பிரிவில் இருந்ததாய் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சாலியர், பட்டுநூல் நெய்பவர்களையும், வாணியர் வணிகர்களையும் குறிப்பதாகும். அத்தானிநல்லூர் என்பது வணிகர்கள் வாழ்ந்த ஊர். மூன்றாம் ராஜராஜனின், 14வது ஆட்சியின் ஒரு கல்வெட்டு, ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவில் முன் உள்ளது. பல மண்டல வணிகர்கள் ஒன்றுகூடி, ராசிபுரம் வணிகர்களுக்கு, வீரப்பட்டிணம் என்ற வணிக நகரத்தை அமைத்து கொடுத்ததை கூறுகிறது. இந்த ஊர், தற்போதும் பட்டணம் பெயரில், வணிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 13ம் நூற்றாண்டில் ராசிபுரம், பட்டணம், அத்தனூர் போன்ற பகுதிகள், வணிக நகரமாக இருந்தன. இப்பகுதியில், மேலும் ஆய்வு செய்தால், அரிய வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.