ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் 50.58 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 25 நாட்களுக்கு பிறகு நேற்று சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்ச மூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின் உண்டியல் காணிக்கைகளை கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணினர். இதில் 50 லட்சத்து 58 ஆயிரத்து 725 ரூபாய் ரொக்க பணம், 343 கிராம் தங்கம், 5 கிலோ 750 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. கோயில் ஊழியர்கள், பர்வ தவர்த்தினி அம்மன் பெண்கள் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் உண்டியல் எண்ணினர்.