’தினமலர்’ செய்தி எதிரொலி: ராமேஸ்வரம் வீதியில் பந்தல்.. பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2017 12:04
ராமேஸ்வரம்: ’தினமலர்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் பந்தல் அமைத்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். தற்போது, ராமேஸ்வரத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி, கோயிலில் தரிசனம் செய்து ரதவீதியில் நடந்து செல்கின்றனர். அப்போது வயதான பக்தர்கள், குழந்தைகள், பெண்கள் வெயில் தாக்கத்தால் ஒதுங்க நிழலின்றி தவிக்கின்றனர். சில சமயம் பக்தர்கள் மயக்கம் அடைகின்றனர். இதனை தவிர்க்க வேண்டி, கோயில் நான்கு ரதவீதியில் பாதுகாப்பான வகையில் நிழல் தரும் பந்தல் அமைக்க வேண்டும், என மார்ச் 24ல் ’தினமலர்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரித்த இந்து அறநிலைத்துறை ஆணையர், பக்தர்களுக்கு இளைப்பாற வசதி செய்யுமாறு ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் செல்வராஜூக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று கோயில் ரதவீதியில் தகர சீட்டில் நிழல் தரும் பந்தல் அமைத்தனர். இதனால், ரதவீதியில் நடக்கும் பக்தர்கள் பந்தலில் இளைபாறி சென்றனர்.