பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
03:04
திருவள்ளூர் : ராமநவமியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடந்தது. ராமபிரான் பிறந்த தினமான நேற்று, ராமநவமி உற்சவம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பெருமாள் கோவில்களில் கொண்டாடப்பட்டது. திருவள்ளூர், வீரராகவர் பெருமாள் கோவிலில், நேற்று காலை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது. பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில், ராமநவமியை முன்னிட்டு, சீதா லட்சுமண அனுமன் சமேத கோதண்டராமருக்கு திருக்கல்யாணம் உற்சவம் காலையில் நடந்தது. சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், ராமநவமி சிறப்பு அபிஷேகம், துனி பூஜை, ராம கீர்த்தனைகள் மற்றும் சாயிநாதர் சிறப்பு பஜனை நடந்தது. திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், ராம அவதார மூல பாராயணம், உபன்யாசம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை வழிபட்டனர்.