திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரம் கூத்தாண்டவர் கோவிலில்‚ தேரோட்டம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில், திருவிழா கடந்த 15 நாட்களுக்குமுன் துவங்கியது. தினசரி மகாபாரத சொற்பொழிவு நடந்தது. நேற்று முன்தினம் இரவு அரவாணிகள் தாலிக்கட்டும் வைபவம், தொடர்ந்து கூத்தாண்டவர் இந்திர விமானத்தில் திருமண கோல வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு‚ சுவாமி பிரம்மாண்ட உருவத்தில்‚ யுத்த கோலத்துடன், தேர்வடிவில் அரவான் எழுந்தருளினார். வேண்டுதல் உள்ள பக்தர்கள் ஆடு, கோழிகளை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேர் நிலையை அடைந்தவுடன், மாலையில் களபலி உற்சவம் நடந்தது. இதில் அரவாணிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.