பதிவு செய்த நாள்
07
நவ
2011
03:11
சாஸ்தாவுக்கு ஐயனார், சாத்தன், ஐயப்பன், அரிஹரபுத்திரன் எனப் பல பெயர்கள் உள்ளன. கிராமங்களில், ஊருக்கு வெளியே காவல் தெய்வமாக சாஸ்தாவுக்கு கோயில் கட்டி வழிபடத் துவங்கினர். ஊர் எல்லையில் இருந்தபடி, தீய சக்திகள் ஊருக்குள் வராமல் தடுத்து விரட்டுவார் சாஸ்தா என்று நம்புகின்றனர். பவுத்தர்கள்கூட, இவருக்கு பிரம்ம யட்சனர் எனும் பெயர் சூட்டி, பரிவார தெய்வமாக வழிபடுகின்றனர். சாஸ்தாவுக்கு, பங்குனி உத்திர திருநாள் விசேஷம். கொடைவிழா என்று பக்தர்கள் சாஸ்தாவை கொண்டாடி மகிழ்வர். பொதுவாக, சாஸ்தாவுக்கு பச்சைக் காய்கறிகளும் பழங்களும் முக்கியப் படையலாக இருக்குமாம். அதேபோல், ஆடு, மாடு மற்றும் கோழிகளை சாஸ்தாவுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்தும் வழக்கமும் உண்டு. சாஸ்தா கோயில்கள் சிலவற்றில் மட்டுமே பலியிடுகிற வழக்கம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அப்படி பலியிடுதல் முடிந்ததும், அந்த இறைச்சியைக் கொடிபோல் கட்டி, வண்டியில் ஊர்வலமாக எடுத்து வந்து, பிறகு நன்றாக காயவைத்து சமைத்துச் சாப்பிடுகிற வழக்கமும் உண்டாம். இதனை, கொடியிறைச்சி என்றும், இந்த வழிபாட்டை சாஸ்தா பரிதி என்றும் சொல்கின்றனர். ஆலயங்களில், மூலவர் கல்விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தருவார். ஆனால், சாஸ்தா முதலான கிராம தெய்வங்கள், களிமண்ணால் செய்யப்படும், சூளையில் வைத்துச் சுட்டு உருவாக்கப்படுகின்றன. சாஸ்தாவை வழிபாடு செய்தால், சங்கடங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.