பதிவு செய்த நாள்
21
ஏப்
2017
12:04
ஆர்.கே.பேட்டை : சித்திரை பிரம்மோற்சவத்தில், சந்தான வேணுகோபால சுவாமி, நேற்று முன்தினம் இரவு, குதிரை வாகனத்தில் பவனி வந்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரத்தில் அமைந்துள்ளது பழமையான சந்தான வேணுகோபால சுவாமி கோவில். பசுவின் மீது சாய்ந்து நின்றபடி, வேணு கானம் இசைக்கும் கோலத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். கிருஷ்ண கானத்தில் மயங்கிய பசு, தன் நாவினால், சுவாமியின் பாதங்களை தடவிக்கொடுப்பது போன்று ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம், இங்கு சிறப்பம்சம். கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பிரம்மோற்சவம், நேற்று காலை தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. தினசரி அம்ச வாகனம், சிம்மம், அனுமன், கருடன், யானை என, பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம், காலையில், தேரில் எழுந்தருளிய சுவாமி, மாலையில், குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். சுவாமியை வரவேற்கும் விதமாக, தெருவெங்கும் மாக்கோலம் இட்டு அலங்கரித்த பெண்கள், தீபாராதனையுடன் சுவாமியை வணங்கினர். நேற்று காலை, 10:00 மணிக்கு, பந்து விளையாடல் மற்றும் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெற்றது.