பதிவு செய்த நாள்
03
மே
2017
12:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கட்டடத்திற்கு, வணிகம் தொடர்பான வாடகை பாக்கி வைத்துள்ள, முதல், ஏழு நபர்களின் விபர பட்டியல், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுஉள்ளது.
பிரபலம்: காஞ்சிபுரம் காந்திரோடில் உள்ளது வழக்கறுத்தீஸ்வரர் கோவில், இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, பிப்., 9ல் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 2011ல் இருந்து, ஊழல் வழக்கில் சிக்கியவர்கள், இங்கு வந்து வழிபட்டு செல்வதால், இந்தியா முழுவதும் இக்கோவில் பிரபலம்அடைந்து வருகிறது.
வழக்குகளில் வெற்றி: இங்கு, 16 திங்கட்கிழமை, 16 விளக்கேற்றி, சுவாமியை வலம் வந்து வழிபட்டால், தீராத வழக்குகளும் தீர்ந்து, வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக வழக்குகளில் சிக்கியவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபடுவது அதிகரித்து வருகிறது.இக்கோவிலுக்கு சொந்தமான, கட்டடத்திற்கு வணிகம் தொடர்பாக, கடந்த, 16 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவை வைத்துள்ளவர் மற்றும் அதிகபட்ச தொகை, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளவர் உட்பட முதல், ஏழு நபர்களின், விபரங்கள் அடங்கிய பதாகை, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.