பதிவு செய்த நாள்
04
மே
2017
12:05
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று, கருட சேவை நடைபெற்றது. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சைத்ர பிரம்மோற்சவம், கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, மாலை இரு வேளையிலும், உற்சவர் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வந்தார்.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று,
விடியற்காலை 4:30 மணிக்கு, கோபுர தரிசனம் கருட சேவை நடைபெற்றது. பச்சை வண்ண பட்டு உடுத்தி மலர் அலங்காரத்தில், காலை, 5:30 மணிக்கு வீரராகவர் கருட வாகனத்தில் வீதியுலா புறப்பட்டார். வழிநெடுக பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.
ஈக்காடு தேவஸ்தான மண்டபத்தில், உபயங்கள் கண்டருளி மதியம் கோவிலுக்கு திரும்பினார். நேற்றிரவு, 8:30 மணிக்கு ஹனுமந்த வாகனத்தில் வீதிவலம் வந்தார். சைத்ர உற்சவத்தின் நான்காவது நாளான, இன்று, காலை, 6:00 மணிக்கு, சேஷ வாகனத்திலும், இரவு, 7:30 மணிக்கு சந்திர பிரபையிலும் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.