பதிவு செய்த நாள்
05
மே
2017
12:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், மே, 7 காலை, 8:35 மணிக்கு மேல், காலை, 8:59 மணிக்குள் நடக்கிறது. கோவில் சார்பில், ஒரு லட்சம் பக்தர்களுக்கு பாக்கெட் பிரசாதம் வழங்கப்பட உள்ளது. திருக்கல்யாணம் முடிந்ததும், கோவில் சார்பில், சிறிய அளவில் திருக்கல்யாண விருந்து நடக்கிறது. 50 ரூபாய், 100 ரூபாய் திருக்கல்யாண மொய் காணிக்கை செலுத்தி ரசீது பெறலாம். திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கோவில் சார்பில், ஒரு லட்சம் பக்தர்களுக்கு மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறு, கோவிலில் தயாரிக்கப்பட்ட தாழம்பூ குங்குமம் அடங்கிய பாக்கெட் பிரசாதமாக வழங்கப்படும். இதற்கான பணியில், திருக்கல்யாண உழவார சேவார்த்திகள், 30 பேர், கடந்த ஏப்., 28 முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பட்டாபிஷேகம் : மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, 12 நாட்கள் நடக்கும். எட்டாம் நாள் விழாவான, ’மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்’ அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இன்று, மாலை, 6:55 மணிக்கு மேல், இரவு, 7:19 மணிக்குள் நடக்கிறது. மீனாட்சி அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுத்தல், அம்மனிடம் இருந்து, தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோல் பெற்று, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பிக்கும் விழா நடக்கிறது.