பதிவு செய்த நாள்
05
மே
2017
12:05
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நமசிவாய கோஷம் ஒலிக்க, 63 நாயன்மார்களுக்கு, பஞ்சமூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம், கோலாகலமாக நேற்றிரவு நடந்தது.
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானதும், முதலை உண்ட பாலகனை, சுந்தரமூர்த்தி நாயனார் மீட்ட தலமாகவும் பிரசித்தி பெற்றது அவிநாசி. இங்குள்ள, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 30ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வான, நாயன்மார்களுக்கு, பஞ்ச மூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம், நேற்றிரவு நடந்தது. காலை தேவாரம், திருவாசகம் முழங்க, 63 நாயன்மார்களுக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நாயன்மார்கள், சப்பரங்களில் எழுந்தருளினர். இரவு, மூஞ்சூறு வாகனத்தில் ஸ்ரீ விநாயகர்; ரிஷப வாகனத்தில், சோமாஸ்கந்தர்; காமதேனு வாகனத்தில், கருணாம்பிகை அம்மன்; ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்; மயில் வாகனத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அவிநாசி தல புராணத்தை, ஓதுவாமூர்த்திகள் ஓத, நான்கு வேதங்களை வேத விற்பன்னர்கள் பாராயணம் செய்ய, சிவகண பூத வாத்யங்கள் முழங்க, நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சியளித்தனர்.
இதைக்கண்ட பக்தர்கள், ஓம் நமசிவாய என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். அதன்பின், தேர் நிலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின், பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் எழுந்தருளினர். பின், பஞ்ச வாத்தியங்கள் முழங்க, தேரோடும் வீதிகளில், நாயன்மார்கள் திருவீதி உலா சென்றனர். இதனால், அவிநாசி நகரமே விழாக்கோலம் பூண்டது. வண்ண விளக்குகள், வாண வேடிக்கைகள் அதிர, அறுபத்தி மூவர் திருவிழா கோலாகலமாக நடந்தது. அறுபத்து மூவர் விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளையினர் செய்திருந்தனர். நான்கு ரத வீதிகளில், அழகிய குடைகளுடன், வண்ண விளக்கு அலங்கரிக்கப்பட்டது. திருவீதியுலாவின் போது, வாண வேடிக்கையும் நடந்தது. சிவனடியார் திருக்கூட்ட அடியார்கள், சிவகண பூத வாத்யம் இசைத்தனர்.