பதிவு செய்த நாள்
05
மே
2017
12:05
ராக்கிப்பட்டி: எட்டுக்கை அம்மன், லட்சக் கணக்கான ரூபாய் நோட்டுகளால், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், காகாபாளையம் அருகே, ராக்கிப்பட்டியில் உள்ள பண்ணைக்குல பங்காளிகள் குல தெய்வமான, எட்டுக்கை அம்மன் கோவிலில், சித்திரை மாத பொங்கல் திருவிழா, ஏப்., 25ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு சக்தி அழைத்தல் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, சேலம், நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குடும்பத்தினருடன் வந்து, கோவில் முன், பொங்கல் வைத்து, மூலவர் எட்டுக்கை அம்மனை வழிபட்டனர். சிலர், மொட்டையடித்து வேண்டுதல் நிறைவேற்றினர். மேலும், ஒன்று முதல், 2,000 ரூபாய் வரையில், லட்சக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகளால், கருவறை சுவர் முதல், விநாயகர் மற்றும் அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அதேபோல், ராக்கிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில், ஆண்டு பொங்கல் விழா நடந்தது. அதற்காக நடந்த சக்தி அழைத்தல் ஊர்வலத்தில், நூற்றுக்கணக்கான பெண்கள், சீர்வரிசை தட்டுகளுடன், முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.