பதிவு செய்த நாள்
05
மே
2017
12:05
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக நிழற்கூரை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. குடைவரை கோவிலான நரசிம்மர் கோவிலின் உப கோவிலான இங்கு, சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், பேவர்பிளாக் கல் பதிக்கப்பட்டு, கூல் பெயின்ட் அடிக்கப்பட்டது. இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து நரசிம்மர் கோவிலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதனால், பக்தர்கள் சிலர் தங்களது சொந்த செலவில் நிழற்கூரை அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதில், சக்கரங்களுடன் கூடிய இரும்பு ஆங்கிள் பதித்து, மேற்கூரையாக கூல் தகடு பொருத்தப்பட்டது. ஒரு கூரைக்கு, 16 ஆயிரம் ரூபாய் வீதம், 21 நிழற்கூரைகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் துவங்கியுள்ளது. தற்போது, 10 கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 11 கூரைகள் தயாரிக்கப்படுகின்றன. விரைவில், நரசிம்மர் கோவில் வரையிலும் முழுமையாக நிழற்கூரை அமைக்கப்படும்.