உலகம் கடவுளின் விளையாட்டு மைதானம். இங்கு அவன் நடத்தும் செயல்கள் பற்றி புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. உண்மையைப் பேசு. நல்லதைச் செய். தெய்வத்தை நம்பு. வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்வாய். தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண் உடையவன். நேர்மை தவறாமல் வாழ்வதோடு, பிறருக்கு உதவி செய்ய விரும்புவோரே மேலானவர்கள். மற்றவர்கள் அனைவரும் கீழ்மக்களே. ஊர் மக்களின் ஒற்றுமை கோவிலால் நிறைவேறுகிறது. வீட்டில் வழிபாடு செய்வதால் குடும்ப ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது. தெய்வம் அறிவு மயமாக இருக்கிறது. அந்த அறிவுக் கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையாக இருக்கிறோம்.
மனத் தளர்ச்சிக்கு சிறிதும் இடம் தரக் கூடாது. மனம் உற்சாகத்துடன் இருந்தால் உடம்பில் சுறுசுறுப்பும், ஆற்றலும் பெருகும்.நான் என்னும் பிரிவு உணர்ச்சி நீங்கி விட்டால், மனிதன் எல்லையற்ற தெய்வ நிலையோடு சேர்கிறான். இதையே சக்தி யோகம் என்று குறிப்பிடுகின்றனர். சமூக மதிப்புடன் வாழும் மனிதனுக்கு நேரும் அவமானம், மரணத்தை விடவும் கொடிய தண்டனையாக இருக்கும்.சிறு வயதில் ஏற்படும் எண்ணங்கள் மிகவும் வலிமைமிக்கவை. அவற்றை எளிதில் யாராலும் அசைத்து விட முடியாது. அநியாயத்தை அநியாயத்தால் எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அநியாயத்தை நியாயத்தாலும், அதர்மத்தை தர்மத்தாலும் வெற்றி கொள்ள வேண்டும். அச்சம் இருக்கும் வரை மனிதன் அறிவாளியாக முடியாது. அச்சப்படுபவனிடம் இருக்கும் அறிவால், யாருக்கும் நற்பலன் உண்டாகாது. அறிவே நம் ராஜாவாக இருக்கிறது. மனமும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும். இல்லாவிட்டால் அவற்றுக்கு கேடு உண்டாகும்.
அன்பு, கொள்கை அளவில் இருந்தால் மட்டும் போதாது. செயலில் வெளிப்பட்டால் மட்டுமே பயனுள்ளதாக அமையும். எந்த விஷயத்திலும் இன்பம், துன்பம் இரண்டும் இருக்கவே செய்கிறது. அறிவின் துணையால் துன்பத்தை நீக்கி, இன்பத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வாழ்வில் பெரிய துன்பங்களை அனுபவித்த பின்னரே, மனிதனுக்கு சிறிய உண்மைகள் புலப்பட ஆரம்பிக்கின்றன. சொல்கிறார் பாரதியார்