கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலுடன் இணைந்த சன்னதியில் பட்டாபிஷேக ராமர் சமேத சீதா பிராட்டியார், பரதன், சத்துருக்கனன், லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சைத்ரோத்ஸவ உற்சவம் நடக்கும். கடந்த மே 2 அன்று பட்டாபிஷேக ராமர் சன்னதி முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் அருகே உள்ள ஆண்டவன் ஆசிரமத்தில் பட்டாபிஷேக ராமருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கோஷ்டி பாராயணம் நடந்தது. கல்யாண ஜெகநாதபெருமாள், பட்டாபிஷேகராமர் ஆகியோர் இரட்டை கருடசேவையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை கோயில் பேஷ்கார் கண்ணன், ஆசிரம மேலாளர் ரகுவீரதயாள் ஆகியோர் செய்திருந்தனர்.