பதிவு செய்த நாள்
18
மே
2017
11:05
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் மே 29ல் துவங்குகிறது.
கோயிலில் மே 29ல் காலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறு முகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து சிவாச்சார்யார்களால் காப்பு கட்டப்படும்.வசந்த மண்டபத்தில் மைய பகுதியில் உள்ள மேடையின் அடிப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் அமைக்கப்படும் ஊஞ்சலில் இரவு 7:00 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி,தெய்வானை எழுந்தருள்வர்.
விசாக பால்குட திருவிழா: ஜூன் 7 அன்று அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்படத்தில் எழுந்தருள்வர். திருப்பரங்குன்றம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக தலையில் சுமந்துவரும் குடங்களில் இருக்கும் பால், சுவாமிக்கு மதியம் 2:00 மணிவரை தொடர்ந்து குடம் குடமாக அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 8 அன்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருள்வர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து இரவு பூ பல்லக்கில் கோயில் திரும்புவார்.