பதிவு செய்த நாள்
18
மே
2017
11:05
திருத்தணி : திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில், நேற்று, மஹா சண்டி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி, அக்கைய்யா நாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழாவையொட்டி, மகா சண்டி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், கோபூஜை, மகாலட்சுமி ஹோமம் உட்பட சண்டி பாராயணம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, கலச அலங்காரம் மற்றும் சண்டி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் மூலவருக்கு கலச நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், அன்னதானமும், மாலை, 5:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சண்டி ஹோமத்தில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.