பதிவு செய்த நாள்
22
மே
2017
02:05
பத்ரயோகி ரிஷி கடும் தவத்திலிருக்கிறார். வேட்டையாட வந்த திரிகர்த்த நாட்டு இளவரசன் சத்தியரதி, முனிவரை நமஸ்கரித்தான். இகலோக சிந்தனையில்லாத ரிஷி எப்படி அவனை ஆசிர்வதிப்பார்! இளவரசனோ, தம்மை அலட்சியப்படுத்தியதாக வெகுண்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். புலி அடித்துக் கொன்ற ஒரு வழிப்போக்கன் உடலைச் சிதைத்து, முனிவர் முன் போட்டான். முனிவரைப் பழிவாங்க எண்ணிய அவனைப் பழி சூழ்ந்தது. முனிவர் கண் விழித்தார். அரச குமாரனின் அடாத செயலைக் கண்டு பிசாசு செய்யும் வேலையைச் செய்த நீ பிசாசாகப் போ என சபித்தார். பிசாசாக மாறிய இளவரசன், அங்கிருந்து சென்றான். காமத்தை வென்ற நாம், சினத்தை ஜெயித்தோமில்லை என வருந்தினார் ரிஷி. அதற்குப் பிராயச்சித்தமாக கோடி லிங்கங்களைத் தரிசனம் செய்வது எனத் தீர்மானித்துப் புறப்பட்டார். அப்படியே கொட்டையூர் வந்தார். கோடி தீர்த்தம் எனப்படும் அமுத வாவியில் நீராடி ஏரண்டேஸ்வரரை வழிபட்டார். அப்போது, அன்ப! இனி நீ அலைய வேண்டாம். எம்மை தரிசித்ததே கோடி லிங்க தரிசனத்துக்குச் சமம். இங்கேயே தவத்தைத் தொடர்க என அசரீரி ஒலித்தது. அப்படி இங்கெனன் விசேஷம்? என்று ரிஷி கேட்க, நாளைக் காலை உன் கேள்விக்கு விடை கிடைக்கும் என பதில் வந்தது.
மறுநாள் காலை காவிரியில் நீராடுகையில் கையில் தண்டு, கமண்டலத்துடன் ஒரு துறவியை சந்தித்தார் பத்ர யோகி. பரஸ்பரம் குசலம் விசாரித்த பின், கொட்டையூர் மகிமையைச் சொன்னார் துறவி. அத்ரி மகரிஷியின் வம்சத்தில் தோன்றியவர் ஏரண்ட மகரிஷி. ஆமணக்கு மரத்தினடியில் மணலால் லிங்கம் அமைத்து, அமுதக் கிணறையும் ஏற்படுத்தி சிவ வழிபாடு செய்து வந்தார். இதனால் ஊருக்கே, ஏரண்டபுரம் என்று பெயர் வந்தது. சோழ நாட்டை கனகத்துவஜன் ஆண்டு வந்தான். அவன் மனைவி செண்பகா தேவி. பாய்ந்து வந்த காவிரியாறு சக்தி வனத்திலுள்ள பெரிய பள்ளத்தின் வழியாக பாதாளத்தில் இறங்கிவிட்டது. அடடா... நாடு வளம் பெற வழியில்லையே? என்று அரச தம்பதியர் கபர்த்தீஸ்வரரை பிரார்த்திக்க, ஒரு அரசனோ, மகரிஷியோ பள்ளத்துள் இறங்கி உயிர்த் தியாகம் செய்தால் காவிரி வெளிப்படும் என அசரீரி ஒலித்தது. மன்னன் உயிர்த் தியாகம் செய்யத் தயாரானான். எதைச் செய்தாலும் குரு ஆசீர்வாதம் வேண்டுமல்லவா? கொட்டையூர் புறப்பட்டான். ஏரண்ட முனிவரிடம் அசரீரி வாக்கைச் சொன்னான். நானும் வருகிறேன் என்றார் ரிஷி. மக்களெல்லாம் கண்ணீரோடு கூடியிருந்தனர். நல்ல மன்னன் கிடைப்பது கஷ்டம் என்று கூறி, சடாரென்று பள்ளத்தில் குதித்தார் ஏரண்ட மகரிஷி உடனே, பள்ளம் அடைபட்டு காவிரி குதித்து வலம் கழித்து வந்தது. அன்றிலிருந்து அத்தலம், திருவலஞ்சுழி எனப் பெயர் பெற்றது. இந்தக் கோயிலும் ஏரண்ட முனிவர் சிலை உள்ளது.
இது, மன்னனுக்கும், முனிவருக்கும் கோடி லிங்கமாக, கோடி அம்பாளாக, கோடி விநாயகராக, கோடி முருகனாக தரிசனம் கொடுத்த இடம். லிங்கத்தின் மேல் ஆமணக்குக் கொட்டை பதித்ததுபோல் இருப்பதைப் பாருங்கள் என்று கூறிய துறவி, மறைத்து விட்டார். வியாச முனிவர் சொற்படி, பிசாசாக அலைந்த தன் புதல்வனைக் கட்டி இழுத்து வந்த திரிகர்த்தராஜன் அவனைக் கோடி தீர்த்தத்தில் குளிக்க வைத்தான். உடனே, பிசாசு வடிவம் நீங்கியது. பத்ரயோகியாரிடம் தந்தையும், மகனும் மன்னிப்பு கோரி நமஸ்கரித்தனர். முனிவரும் மனமார வாழ்த்தினார். பந்தாடியபடி ஏரண்ட முனிவருக்கு தரிசனம் கொடுத்த தேவி, பந்தாடும் நாயகியாகத் தரிசனமளிக்கிறாள். கொட்டையூரில் செய்த பாபம் கட்டையோட என்பதால் இந்த க்ஷேத்திரத்தில் பாபம் செய்தாலும் அது கோடி பங்காகிவிடும் என்கிறது புராணம்.