Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
7. துயிலெழுப்பிய காதை 9. பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை
முதல் பக்கம் » மணிமேகலை
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2011
05:11

எட்டாவது மணிமேகலை மணிபல்லவத்துத் துயிலெழுந்து துயருற்ற பாட்டு

அஃதாவது: மணி பல்லத்தின்கண் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயில் கலையாமலே வைத்துப் போன பின்னர் அத்தீவகத்தில் துயில்கொண்டிருந்த மணிமேகலை வைகறையிலேயே வழக்கம்போல் துயிலுணர்ந்து நோக்கினவள் அவ்விடம் தான் கண்டிராத புதிய இடமாயிருத்தல் கண்டு யாதொன்றும் காரணங் காணமாட்டாளாய்ப் பெரிதும் திகைத்தனள். கதிரவன் தோன்றிய பின்னர் ஆங்கு எழுந்து சுற்றிப் பார்த்து மக்கள் வழக்கமும் இல்லாமையால் வருந்தித் தன் தந்தையை நினைந்து அழுதரற்றும் செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயிலக்கிடத்திய மணிபல்லவத்தின் வண்ணனையும் பூம்புகார் நகரத்து உவவனத்தே துயில்கொண்டு மணிபல்லவத் தீவின் கண் துயிலுணர்ந்த மணிமேகலை பண்டறி கிளையொடு பதியும் காணாளாய்க் கண்டறியாதன கண்ணிற் கண்டு மருள்பவளின் நிலைமையை இப் புலவர் பெருமான் தன்மை நவிற்சியாகக் கூறிக் காட்டும் புலமைத்திறமும் பெரிதும் போற்றத் தகுவனவாக அமைந்திருத்தல் காணலாம்.

மணிமேகலை மருண்டு தந்தையை நினைந்து அழுதரற்றும் பகுதி ஓதுபவர் உள்ளத்தை உருக்கம் இயல்பிற்றாக அமைந்துளது. மணிபல்லவத் தீவு அழகொழுகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளது. அப்பால் அத் தீவிலுள்ள புத்தபீடிகையின் வரலாறும் தெய்வத்தன்மையும் இக்காதையில் இனிது கூறப்பட்டுள்ளன.

ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல்
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு
விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர்  08-010

அறல் விளங்கு நிலா மணல் நறு மலர்ப் பள்ளித்
துஞ்சு துயில் எழூஉம் அம் சில் ஓதி
காதல் சுற்றம் மறந்து கடைகொள
வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று
பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்
கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப
உவவன மருங்கினில் ஓர் இடம்கொல் இது!
சுதமதி ஒளித்தாய்! துயரம் செய்தனை!  08-020

நனவோ கனவோ என்பதை அறியேன்!
மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்!
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
மெல் வளை! வாராய் விட்டு அகன்றனையோ?
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள்
வஞ்சம் செய்தனள்கொல்லோ? அறியேன்!
ஒரு தனி அஞ்சுவென் திருவே வா! எனத்
திரை தவழ் பறவையும் விரி சிறைப் பறவையும்
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்
அன்னச் சேவல் அரசன் ஆக  08-030

பல் நிறப் புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி
பாசறை மன்னர் பாடி போல
வீசு நீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும்
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும்
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள்
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ் துயர் எய்திய விழுமக் கிளவியின்
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி
எம் இதில் படுத்தும் வெவ் வினை உருப்ப  08-040

கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து
வை வாள் உழந்த மணிப் பூண் அகலத்து
ஐயாவோ! என்று அழுவோள் முன்னர்
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி
உரை பெறு மும் முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று
பதும சதுரம் மீமிசை விளங்கி
அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது  08-050

பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது
தேவர் கோன் இட்ட மா மணிப் பீடிகை
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி
எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத்
தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்
இருஞ் செரு ஒழிமின் எமது ஈது என்றே  08-060

பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்  08-063

மணிபல்லவத்தே மணிமேகலை துயிலுமிடத்தின் மாண்பு

1-12: ஈங்கிவள்.........அஞ்சிலோதி

(இதன் பொருள்) இவள் ஈங்கு இன்னணம் ஆக- இப் பூம்புகார் நகரத்திலே மணிமேலையைப் பிரிந்து ஆற்றாமையால் பெரிதும் வருந்திய சுதமதி என்பாளின் நிலைமை இவ்வாறாக; இருங்கடல் வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்து இடை- பெரிய கடலினது நாற்புறமும் வளைந்து வந்து மோதுகின்ற அலைகளை அணிந்துள்ள மணி பல்லவம் என்னும் தீவினகத்தே; தத்து நீர் அடை கரை சங்கு உழுதொடுப்பின் முத்து விளை கழனி-தவழுகின்ற நீரை அடைக்கின்ற கரையினையும் சங்குகளால் உழப்பட்டு விதைத்த விதைப்பின்கண் முத்துக்களாகிய கூலம் விளைகின்ற வயல்களையும்; முரி செம்பவளமொடு விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்- கொடிகளிலே முரிந்த சிவந்த பவளக் கொடிகளையும் உடை கலங்களினின்றும் மிதந்த சந்தனம் முதலிய நறுமண மரங்களையும் சுமந்து வந்து உருட்டுகின்ற அலைகள் உலாவுகின்ற நெய்தனிலப்பரப்பினையும்; ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்- புலிநகக் கொன்றை மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள தாழ்ந்த நன்னீர் ஊற்றுக் கண்களையுடைய ஈரம்புலராத நிலப்பகுதியினையும் ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி வண்டு உண மலர்ந்த- ஆம்பலும் குவளையுமாகிய கொடிகள் தம்முள் விரவிப் படர்ந்து கலந்து பசித்துவருகின்ற வண்டுகள் தாதுண்டு மகிழுமாறு மலர்ந்திருக்கின்ற; குண்டு நீர் இலஞ்சி- ஆழமான நீரையுடைய பொய்கைக் கரையினையும்; முடக்கால் புனையும் மடல் பூந் தாழையும் வெயில் வரவு ஒழித்த-அக்கரையின் மேனின்ற முடம்பட்ட காலையுடைய புன்னை மரமும் மடலாற்சிறந்த பூவினையுடைய தாழையும் தழைத்துச் செறிதலாலே வெயில் புகுதாதபடி தடுத்துள்ள; பயில் பூம் பந்தர்-பயிலுதற் கினிய பூக்களோடியன்ற நீழலின் கீழ்; அறல் விளங்கு நிலாமணல் நறுமலர்ப்பள்ளி- வரிவரியாகத் திகழா நின்ற நிலவொளி போன்ற நிறமமைந்த மணற்பரப்பின் மேல் மணிமேகலா தெய்வம் பரப்பிய நறிய மலராகிய பாயலின் மேலே; துஞ்சு துயில் எழூஉம் அம்சில் ஓதி-ஆழ்ந்து துயின்ற துயிலினின்றும் வழக்கம் போன்று எழுகின்ற மணிமேகலை; என்க.

(விளக்கம்) ஈங்கு இவள் என்றது புகார் நகரத்துள்ள சுதமதி என்றவாறு. இன்னணம்- இவ்வாறு இவள் இவ்வாறாக எனவே, இஃது இனி யாம், மணிமேகலா தெய்வம் விஞ்சையிற் பெயர்த்து மணி பல்லவத்திடை வைத்து நீங்கிய மணிமேகலையின் திறங் கூறுவாம் என்று குறிப்பாக நுதலிப் புகுந்தவாறாயிற்று. வாங்கு- வளைந்த. அடைகரையினையுடைய கழனி சங்கு உழுகழனி தொடுப்பின் கழனி முத்துவிளை கழனி என்று தனித்தனி கூட்டுக. இது சொல் மாத்திரையால் மருதத்திணை கூறியபடியாம். உழுதல் கூறவே வித்தலும் விளைபொருளும் கூறினார். சங்கு உழுது முத்தாகிய விதையை விதைப்ப முத்தாகிய கூலங்களே விளையும் கழனி என்றார். கழனி- மருதத்திணையில் விளைநிலம். முரி செம்பவளம்: வினைத்தொகை. கொடியில் முரிந்த செம்பவளம் என்றவாறு. விரை மரம்-சந்தன மரம் முதலியன. இவை உடை கலத்தினின்றும் மிதந்தவை. நீரினின்றும் மரங்களைக் கரை யேற்றுவார் அவற்றை உருட்டியே ஏற்றவர் ஆதலின் உருட்டுந்திரை என்றார். மரமுருட்டியவர் இளைப்புற்றுச் சிறிது வாளாதுலாவுதலும் இயல்பாதலின், இத் திரைகளும் அங்ஙனமே உலாவும் என்றார்.

ஞாழல்- புலிநகக் கொன்றை. தீவுகளின் கரையோரப் பகுதிகள் தாமே நன்னீர் ஊற்றெடுக்கும் ஊற்றுக் கண்களையுடையனவாய் எப்பொழுதும் நீர்க்கசிவுடையவாய் வளமுடையவாகவும் இருத்தல் இயல்பு. அவ்விடத்தே ஞாழல் முதலிய மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. அசும்பு- நீர்க்கசிவுடைய நிலம். அவ்விடத்தே இலஞ்சியும் ஒன்றுளதாயிருந்தது. அதன்கரையில் புன்னையும் தாழையும் தழைத்தோங்கி வெயில் புகாதபடி தடுத்து நிழலிட்டிருந்தன. அதன்கீழ் நிலவொளி தவழும் மணற் பரப்பின் மேலே புதிய மலர்களைப் பரப்பி அம் மலர்ப் பாயலின் மேல் மணிமேகலா தெய்வம் தனது பேரருளுக்கு ஆளான மணிமேகலையைத் துயிலவிட்டு அத் தெய்வம் அகன்றது என்பது இதனால் இனிது பெற்றாம். கதிரவன் எழுமுன்னர்த் துயிலுணர்ந்து எழுகின்ற தன் வழக்கப்படியே மணிமேகலை துயிலெழுந்தாள் என்பது தோன்ற அந்நறுமலர்ப் பள்ளித் துஞ்சுதுயில் எழு மஞ்சில் ஓதி என்றார். என்னை? ஆண்டுத் துயிலுணர்த்துவார் பிறர் யாரும் இன்மையின் அப்பொழுது அங்ஙனம் துயிலுணர்ந் தெழுவது அவள் வழக்கம் என்பது போதருதலறிக. துஞ்சு துயில் என்றது துஞ்சுதல் போன்று தன்னையறியாது ஆழ்ந்து துயிலும் துயில் என்றவாறு. துஞ்சினாற் செத்தாரின் வேறல்லர் என்பார் வள்ளுவனார். நல்லுறக்கத்திற்கு இயல்பும் இதுவே என்றுணர்க.

மணிமேகலையின் மருட்கை நிலை

13-27: காதல்.......வாவென

(இதன் பொருள்) காதல் சுற்றமும் மறந்து கடைகொள் வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று-அன்பு காரணமாகத் தனக்குத் தாயே தந்தையே மாமனே மாமியே இன்னோரன்ன உறவுத் தொடர்ப்பாட்டோடு தன்னைச் சூழ விருந்த சுற்றத் தாரை எல்லாம் ஒருசேர மறந்து இம்மை வாழ்க்கை இறுதி எய்த மீண்டும் வேறோர் இடத்தே சென்று புதிய பிறப்பினை எய்தியதோர் உயிர் போலவே; பண்டு அறிகளையொடுபதியும் காணாள்-முன்பு தான் பயின்றறிந்த தாய் முதலிய சுற்றத்தாரோடு தான் வாழ்தற் கிடமான புகார் நகரத்தையும் காணாதவளாகி; கண்டு அறியாதன கண்ணிற் காணா-முன்பு ஒரு பொழுதும் கண்டறியாத புதிய பொருள்களையும் இடத்தையுமே தன் கண்களாலே கண்டு மருளும் பொழுது; நீல மாக்கடல் நெட்டிடை அன்றியும் காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப நீலநிறமுடைய பெரிய கடல் நெடுந்தூரத்திற் கிடத்தலின்றித் தன்னருகே கிடத்தலாலே அந்த விடியற்காலத்தே ஞாயிற்றுமண்டிலம் தன் கதிர்களை விசும்பிலே பரப்பி அக்கடலினின்றும் தோன்றுதல் கண்டு தான் இருக்கும் இடத்தை ஐயுற்று ஆராய்பவள்; உவவனம் மருங்கினில் இது ஓர் இடம் கொல்- நெருநல் யான் சுதமதியோடு மலர் கொய்ய வந்துபுக்க உவவனத்தினுள் அமைந்துள்ள ஓரிடமே இவ்விடம் ஆதல் வேண்டும். ஆம். ஆம். இஃதுவ வனத்தில் ஓரிடமே; ஆயின், சுதமதி யாண்டுப் போயினள்? அவள் நம்மை அசதியாடக் கருதி அயலிலே ஒளிந்திருப்பாள் என்று கருதி; சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை-சுதமதீ! சுதமதீ! நீ ஒளித்திருக்கின்றாய்காண்! விளையாடுஞ் செவ்வி இஃதன்று காண்! ஒளித்துறைதல் வாயிலாய் நீ எனக்குத் துன்பமே செய்தொழிந்தாய்!; நனவோ கனவோ என்பதை அறியேன்- அன்புடையோய்! யான் இப்பொழுது விழிப்பு நிலையிலிருக்கின்றேனா! அல்லது துயிலிடத்தே கனவுதான் கண்டு மருள்கின்றேனா! இவற்றுள் எந்நிலையினேன் என்று அறிகின்றிலேன்; மனம் நடுங்குறூஉம் மாற்றம் தாராய்-என் நெஞ்சம் அச்சத்தால் நடுங்குகின்றது ஆதலால் விளையாடாதே கொள்! மறுமொழி தருவாய்!; வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் வலிய இரவு எப்படியோ கழிந்தொழிந்தது நம்மைக் காணாமையால் அன்னையாகிய மாதவி பெரிதும் மயங்கித்துன்புறுவாள் அல்லளோ? எல்வளை வாராய்-ஓ சுதமதி! இத்துணை கூறியும் நீ என்முன் வந்தாயில்லையே!; விட்டு அகன்றணையோ-அன்புடையோய் ஒரோவழி நீ என்னைத் தமியளாய் ஈண்டே துயில விட்டுப் போய்விட்டனையோ? அவ்வாறு போகவும் துணியாயே! விஞ்சையில் தோன்றிய விளக்கு இழைமடவாள் வஞ்சம் செய்தனள் கொல் அறியேன்-என்னிது! என்னிது! ஒரோவழி நெருநல் இரவு விந்தையுடையவளாய் நம்பால் வந்தெய்திச் சக்கரவாளக் கோட்டத்து வரலாறு கூறிக்கொண்டிருந்த மங்கை ஏதேனும் வஞ்சகச் செயல் செத்தொழிந்தனளோ? அவள் என்னாயினள் என்றும் அறிகின்றிலேனே! ஒரு தனி அஞ்சுவென் திருவேவா என- பெருந்தனிமையாலே எய்தும் துன்பத்திற்கும் அஞ்சுகின்றேன் அருட்செல்வமேயனைய சுதமதியே விரைந்து என்முன் வருதி! என்று பற்பலவும் கூறிக்கொண்டு; என்க.

(விளக்கம்) மணிமேகலா தெய்வத்தாலே முழுதும் வேறாய இடத்திலே விஞ்சையாற் பெயர்த்து வைத்த மணிமேகலைக்கு இம்மைமாறி வேறிடத்திற் பிறந்த உயிரை இப்புலவர் பெருமான் உவமையாக எடுத்துக்கூறும் புலமைத்திறம் நினைந்து நினைந்து மகிழற் பாலதாம்.

ஓரிடத்தே துயின்று அத்துயில் கலையாமலேயே மற்றோரிடத்தே பெயர்த்திடப்பட்ட ஒரு பெண் துயிலுணர்ந்து கொள்ளும் மருட்கையை இவர் எத்துணைத் திறம்படத் தன்மை நவிற்சியாகப் புனைந்துள்ளார், நோக்குமின்!

மணிபல்லவத்தின் கீழ்ப்பகுதியில் கடன் மருங்கிலமைந்தது மணிமேகலையை வைத்த இலஞ்சிக்கரை ஆதலால் கதிரவன் நீரினின்றே அணித்தாகத் தோன்றும் காட்சியை மணிமேகலை நன்கு கண்டனன் என்பது தோன்ற நீல மாக்கடல் நொட்டிடை யன்றியும் காலை ஞாயிறு கதிர் விரிந்து முளைப்ப எனக் கதிரவன் தோற்றத்தை விதந்தெடுத்து விளம்பினர்.

முன்னாளிரவு உவவனத்திலேயே இரவிடை இவள் துயில்கொண்டவளாதலின் இஃது உவவனத்தின்கண்ணமைந்த ஓரிடமே என்று ஊகிக்கின்றாள். அங்ஙனமாயின் நம்மோடிருந்த சுதமதி யாண்டுளள் என்று பின்னர் ஆராய்கின்றனள். மற்று அவளைக் காணாமையின், அவள் நம் பால் கழிபெருங் காதலுடையாள் ஆதலின் நம்மைக் கைவிட்டுப் போகத் துணியாள் ஆயின், அவள்? .......அவள் முன்பே துயிலுணர்ந்தவள் நம்மை எழுப்பவும் மனமின்றி இவள் தானே எழுக! என்றிருந்தவள் நாம் எழுந்து திகைப்பது கண்டு நகைப்பது கருதி இவ்விடத்திலே மறைந்துறைபவள் ஆதல் வேண்டும் என்று மணிமேகலை ஊகிக்கின்றாள்; இஃது இயற்கையோடு எத்துணைப் பொருத்தமாக அமைந்துளது காண் மின்! இங்ஙனம் ஊகித்தவள் உரத்த குரலில் சுதமதீ! சுதமதீ! சுதமதீ! என்று பன்முறை கூவி அழைத்திருப்பாள்; அங்ஙனம் அழைத்தாள் என்பதனைப் புலவர் பெருமான் அடுக்கிக் கூறாது சுதமதி ஒளித்தாய்! என ஒருமுறை விளித்தாள் போலக் கூறினரேனும் இதனைப் பாட்டிடை வைத்த குறிப்பால் யாம் உரையில் அடுக்கிக் கூறினாம்.

சுதமதி ஒளிந்துறைந்தாலும் அண்மையிலேயே ஒளிந்திருப்பாள் என்னும் கருத்தால் சுதமதி ஒளித்தாய் என அண்மை விளியால் விளித்தனள்; விளித்து நீ ஒளித்திருக்கின்றனை என்பது தெரிந்து கொண்டேன் எழுந்து வருதி என்பது இதன் குறிப்பாம். பின்னர்ப் பன்முறை விளித்தும் அவள் வாராமையாலே, இது கனவோ நனவோ என்பதை யறியேன் மனம் நடுங்குறூஉம் மாற்றந்தாராய் என்று தன்னிலை கூறி விரைந்து வெளிவர வேண்டுகின்றனள். பின்னும் சுதமதி அசதியாட ஒளிந்தே இருக்கின்றாள் என்றுட் கொண்டு அங்ஙனம் விளையாட்டயரும் செவ்வியோ இஃது என்று அவட்குப் பேதைமை யூட்டுவாள் வல்லிருள் கழிந்தது நம் வரவு காணாமையாலே மாதவி பெரிதும் மயங்குவளே அதனை நீ நினைந்திலையோ என அவள் விரைந்து வருதற்கு ஏதுவும் கூறி அழைக்கின்றாள். பின்னும் சுதமதி வாராமையால் முன்னாளிரவு தம்மோடு சொல்லாடி யிருந்த விஞ்சையிற் றோன்றிய விளங்கிழை மடவாள்நினைவு அவள் உள்ளத்தே அரும்புகின்றது. அவள் ஏதேனும் வஞ்சம் செய்திருப்பாளோ என்று ஐயுறுகின்றாள்; மருள்கின்றாள். பின்னும் சுதமதியே ஒரு தனி அஞ்சுவன் திருவே வா என்றிரந்து வேண்டுகின்றாள்.இத்துணையும் நிகழ்ந்தபின் சுதமதி ஈண்டில்லை. ஆதலின் அவ் வஞ்சவிஞ்சை மகளால் ஏதோ குறும்பு செய்யப்பட்டுளதோ என்று ஐயுறுகின்றாள்; இஃது உவவனம் அன்று போலும்! அதனை ஆராய்வல் என்னும் எண்ணத்தாலே எழுந்து ஆராயத் தலைப்படுகின்றனள். இப்புலவர் பெருமான் தாமே ஈண்டு அம் மணிமேகலையாய் மாறிவிடுகின்ற அவர்தம் வித்தகப் புலமையை எத்துணைப் புகழ்தாலும் மிகையாகாது. வாழ்க அவர் புகழும் அவர் வழங்கிய தண்டமிழ்க் காப்பியமும்.

மணிமேகலை எழுந்து திரிந்து இடம் ஆராய்தல்

28-35: திரைதவழ்........காணாள்

(இதன் பொருள்) திரை தவழ் பறவையும் விரிசிறைப் பறவையும் எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்- நீரின் மேலே தவழ்ந்து சென்று இரை தேர்கின்ற கடற்பறவைகளும் விரிந்த சிறகுகளோடு வானத்தில் பறந்து திரிந்து இரை தேர்கின்ற பறவைகளும் ஓரிடத்தினின்றும் மற்றோரிடத்திற்கு நீரினின்றும் எழுந்து பறந்துபோய் வீழுகின்ற சில்லைச்சாதிப் பறவைகளும்,ஓடுங்கிய சிறகுகளுடனே நீரினுள் முழுகித் தமக்கியன்ற இரையைப் பற்றிக்கொண்டு தலைதூக்கும் முழுவற் சாதிப் பறவைகளும் ஆகிய நால் வேறு வகைப்பட்ட பறவைகளும் நால் வேறு படை மறவர்களாகவும்; சேவல் அன்னம் அரசனாக-அவற்றுள் சேவலாகிய அன்னப் பறவையே அரசனாகவும்; பல் நிறப் புள்ளினம் பரந்து ஒருங்கு ஈண்டி-பல்வேறு நிறம் அமைந்த பறவைக்கூட்டம் பரந்து தனித்தனியிடத்தே குழுமி; பாசறை மன்னர் பாடி போல- பகை மன்னரிருவர் போர் ஆற்றுதற் பொருட்டு நால் வேறு படைகளுடனே வந்து பாசறையிலிருப்போர் ஒருவர்க்கொருவர் எதிர் எதிர் ஆகத் தத்தம் படையை எதிர் எதிரே விட்டிருந்தாற் போன்று; வீசு நீர்ப்பரப்பின் எதிர் எதிர் இருக்கும்-அலைஎறிகின்ற நெய்தனிலப் பரப்பிலே (துறையினது) இருபக்கங்களிலும் எதிர் எதிரே இருக்கின்ற கடற்றுறையும்; துறைசூழ் நெடுமணற் குன்றமும் யாங்கணும் திரிவோள்-அத் துறையைச் சூழ்ந்துள்ள நெடிய மணற் குன்றுகளும் ஆகிய எவ்விடத்தும் திரிந்து நோக்கி வருபவள்; பரங்கு இனம் காணாள் பண்டு தன் பக்கத்திலே காணப்படும் பொருள்களுக்கு இனமாகிய எப் பொருளையும் காணப் பெறாளாகி என்க.

(விளக்கம்) இவர் கடற்பறவையை அவை இரைதேருமாற்றாலேயே ஈண்டு நான்கு வகையாகப் பிரித்துக் காட்டுகின்றனர். அவையாவன; நீரின்மேல் தவழ்ந்து தமது தோலடியாலே நீரை உதைத்துச் சென்று எதிர்ப்படுகின்ற இரையை அலகாற் பற்றிக் கொள்வனவும்; விசும்பிலே பறந்த வண்ணமே திரிந்து இரையைக்காணும் பொழுது வீழ்ந்து பற்றிக் கொள்வனவும்,ஓரிடத்தினின்றும் மற்றோரிடத்திற்குப் பறந்துபோய் விழுந்து இரை தேர்ந்து பற்றிக் கொள்வனவும், சிறகொடுக்கி நீரினுள் முழுகி நீரினூடேயே இயங்கி ஆங்ககப்படும் இரையைப்பற்றிப் பின் தலை தூக்குவனவுமாம். இவற்றிற்கு(1. அன்னம், 2. சிரல், 3. கடற்காக்கை, 4. குளுவை முதலியவற்றை எடுத்துக் காட்டுகளாகக் கொள்க. இவற்றுள் அன்னச் சேவல் சிறந்திருத்தலின் அதனை அரசன் என்றார். நால் வேறுபடைகளுக்கு நால்வேறு பறவை இனம் காட்டினர். வீசு நீர்ப்பரப் பென்றது அலைதவழும் நிலப் பகுதியை. துறை கூறினர் ஆங்கு மக்கள் இலரேனும் மரக்கலங்கள் வந்து நங்கூரமிட்டு நிறுத்தப் படுவதும் மக்கள் கலத்தினின்றும் இறங்கித் தங்கியிருத்தலும் நிகழ்தலின் அதற்கான துறையும் அங்கு உண்டு என்பதுணர்த்தற்கு. இதனை,

வங்க மாக்களொடு மகிழ்வுட னேறிக்
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்
மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத்
தங்கிய தொருநாள் தானாங் கிழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்றிதை எடுத்து
வழங்குநீர் வங்கம் வல்லிருள் போதலும்
வங்கம் போயபின் வருந்துதுயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்

எனவும்(14-79-86)

கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப

எனவும் இந்நூலில் பிறாண்டும் வருவனவற்றாலறிக. (25:184)

இனி, இதனோடு

கம்புட் கோழியுங் கனைகுர னாரையுஞ்
செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியு நீர்நிறக் காக்கையும்
முள்ளு மூரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக் குரல்பரந்த வோதையும்

எனவரும் சிலப்பதிகாரப் பகுதியை (10.114-119) ஒப்பு நோக்குக.

மணிமேகலை தந்தையை நினைந்து அழுதல்

36-43: குரற்றலை.......முன்னர்

(இதன் பொருள்) குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழகொத்துக் கொத்தாக அடர்ந்துள்ள தன் தலையின்கட் கூந்தல் சரிந்து பின்புறத்தே வீழுமாறு; அரற்றினள் கூஉய் அழுதனள் வாய்விட்டு அரற்றிக் கூவி அழுதவளாய்; ஏங்கி வீழ்துயர் எய்திய விழுமக்கிளவியில் தாழ்துயர் உறுவோள்-ஏங்கி நிலத்தில் வீழ்தற்குக் காரணமான துன்பமுடைய துயரந் தருகின்ற மொழிகளைக் கூறுதலோடே ஆழ்ந்த தனிமைத் துன்பத்தை நுகர்பவள்; தந்தையை உள்ளி-தன் அன்புத் தந்தையாகிய கோவலனை நினைவு கூர்ந்து; எம் இதின் படுத்தும் வெவ்வினை உருப்ப எம்மை இந்நிலையாமைக் காளாக்கிய வெவ்விய ஊழ்வினை வந்துருத்தலாலே; கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து வைவாள் உழந்த- திரண்ட வளையலணிந்த காதலாளாகிய என் அன்னையுடனே வேற்றுவர் நாட்டிலே சென்று ஆங்குக் கூரியவாளே றுண்ணும் கொடிய துன்பத்தை நுகர்ந்த; மணிப்பூண் அகலத்து  ஐயாவோ என்று அழுவோள் முன்னர்- மணியணிகலன் அணியும் அழகிய மார்பினையுடைய ஐயாவோ என்று கதறி அழுகின்ற அம் மணிமேகலையின் முன்னர் என்க.

(விளக்கம்) குரல் தலைக்கூந்தல்- கொத்துக் கொத்தாகத் தலையிலுள்ள கூந்தல் என்க. துன்பத்தானாதல் இன்பத்தானாதல் நெஞ்சம் நெகிழ்ந்துழிக் கூந்தல் நெகிழ்தல் ஒரு மெய்ப்பாடாம்; இதனை கூழைவிரித்தல் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார்(மெய்ப்-14) விழுமக் கிளவி- துன்பத்திற் பிறந்த சொல். துன்ப மிக்கவர் அன்புடையோரை உள்ளுதலியற்கை. மகளிர்க்கு அவ்வழி அழுகை வருதல் இயல்பு.

தந்தைக்கு வந்த வெவ்வினையே தம்மை இந் நெறியிற் செலுத்தியது என்னாமல் எம்மை இங்ஙனம் துன்புறும் நெறியிற் செலுத்தவந்த யாஞ் செய் வெவ்வினையே நும்மை வைவாள் உழப்பித்தது என்பாள் எம்மிதிற் படுத்தும் வெவ்வினை என்கின்றாள். மாதர்-காதல். மாதர் என்றாள் கண்ணகியின் கற்புச் சிறப்பு மேம்பட்டுத் தோன்றுதற்கு. ஐயா என்றது அத்தனே என்றவாறு.

மணிமேகலைக்குப் புத்த பீடிகை புலப்படுதல்

(44 ஆம் முதலாக, 42 ஆம் அடி முடியப் புத்த பீடிகையின் வண்ணனையாய் ஒரு தொடர்)

44-53: விரிந்திலங்.......ஆசனம்

(இதன் பொருள்) விரிந்து இலங்கு அவிர் ஒளிசிறந்து கதிர் பரப்பி- நாற்றிசையினும் பரவித்திகழும் பேரொளி இடையறாது மிகுதலாலே எப்பொழுதும் சுடரைப் பரப்பிக்கொண்டு, உரை பெறும் மும்முழம் நிலமிசை ஓங்கி- சிற்பநூலிற் கூறப்படுகின்ற முறைப்படி மூன்று முழம் நிலத்தினின்று முயர்ந்தம்; திசை தொறும் ஒன்பான் முழம் நிலம் அகன்று- நான்குதிசைகளினும் ஒன்பதுமுழம் நிலப்பரப்பின்மேல் அகன்றும்; மீமிசை-அப்பீடத்தின் உச்சியிலே நடுவிடத்தே, விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று- நூல்விதியினாலே மாண்புடைய பளிங்கினாலே வட்ட வடிவமான பீடமிட்டு; பதும் சதுரம் விளங்கி-அதன் நாப்பண் புத்தருடைய பாதபங்கயம் அழுந்திக் கிடந்த சதுரவடிவிற்றாகிய மேடையால் விளக்கமெய்தி; தேவர்கோமான்- அமரர்க்கு அரசனாகிய இந்திரன் இதுதான்; அறவோற்கு அமைந்த ஆசனம் என்று-அறத்தின் திருவுருவமாகிய புத்த பெருமான் எழுந்தருளுதற்குப் பொருந்திய இருக்கையாம் என்று சொல்லி, இட்ட மாமணிப் பீடிகை-இடப்பட்ட சிறந்த மணிகள் இழைத்த பீடிகையாதலாலே; மரம் நறுமலர் அல்லது பிற சொரியாது-அயலில் நிற்கின்ற மரங்கள் தாமும் தன்மேலே நறிய மணங்கமழும் புதிய மலர்களைக் சொரிவதல்லது பிறவற்றைச் சொரியப்படாததும்; பறவையும் உதிர் சிறை பாங்கு சென்று அதிராது பறவைகள் தாமம் உதிரும் இயற்கையையுடைய சிறகுகள் தமக்கிருத்தலாலே தன் பக்கலிலே தம் சிறகுகளை அடித்துப் பறத்தலில்லாததும்; பிறப்பு விளக்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்-தன்னைக் கண்டவர்க்கெல்லாம் அவரவர் முற்பிறப்பு விளங்கித் தோன்றுவதற்குக் காரணமாய் விளங்குகின்ற தெய்வத்தன்மையுடைய ஒளியையுடையதும் ஆகிய அறப்பெருந் தகையாளனாகிய புத்தருடைய இருக்கையாம்; என்க.

(விளக்கம்) அப்பீடிகை தன்னைக் கண்ட முற்பிறப்புக்களை யுணர்த்துவது. அவ்வாறே பறவைகளும் மரமும் பறவையும் அதன் தெய்வத்தன்மையை உணர்தலின் மரம் மலரன்றிப் பிறவற்றைச் சொரியாது. பறவை அதன் சிறகதிர்ந்து பறவாது என்றவாறு.

பரப்பி ஓங்கி அகன்று குயின்று விளங்கி அமைந்த ஆசனம் அது தானும் சொரியப் படாததும் அதிர்க்கப்படாததும் தேவர்கோன் இட்டதும் ஆகிய பீடிகை, அதுதானும் பிறப்பு விளங்கும் ஒளியையுடைய அறத்தகை ஆசனமுமாம் என இயைத்திடுக. அறத்தகை-புத்தர்.

இதுவுமது

54-63: கீழ்நில......ஆங்கென்

(இதன் பொருள்) கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி ஈது எமது என்றே எடுக்கல் ஆற்றார்- கிழக்குத் திசையிலுள்ள நாகநாட்டினை ஆளுகின்ற இருவேறு மன்னர்கள் அம் மணிபல்லவத்திலே ஒரே செவ்வியில் வந்து, இத் தீவு எம்முடையதாகலின் இம் மாமணிப்பீடிகையும் எமக்கே உரியதாகும் என்று இருவரும் தனித் தனியே உரிமை கொண்டாடி அதனைத் தத்தம் நாட்டிற்குக் கொண்டுபோக எண்ணித் தனித்தனியே நிலத்தினின்றும் பெயர்த்தெடுத்தற்குப் பெரிதும் முயன்றும் அது செய்யவியலாதாராகிய பின்னரும்; தம் பெரும் பற்று நீங்கலும் நீங்கார்-அதன்பால் பசைஇய தத்தம் அவாவினை விலக்குதலும் செய்யவியலாதாராய்த் தம்முடையதே என்னும் உரிமையை நிலைநாட்டுதற் பொருட்டு ஒருவரோடொருவர் இகலி; செங்கண் சிவந்து நெஞ்சு புகை உயிர்த்து தம் பெருஞ் சேனையோடு வெஞ்சமம் புரிநாள்-இயற்கையாகவே சிவந்துள்ள தங்கண்கள் சினத்தாலே மேலும் சிவக்க நெஞ்சம் புகையை உயிர்ப்பத் தத்தமக்குரிய பெரிய படைகளைத் திரட்டிக் கொண்டு வெவ்விய போர்த்தொழிலைச் செய்கின்றபொழுது; பெருந்தவ முனிவன்- பெரிய தவத்தினையுடைய வினையினீங்கி விளங்கிய அறிவினையுடைய முனைவனாகிய புத்தபெருமான் எழுந்தருளி; ஈது எமது இருஞ்செரு ஒழிமின் என்றே- இப் பீடிகை எமக்கே உரிமையுடையதாகும் ஆதலால் நீயிர் ஆற்றும் போரினை ஒழிமின் என்று இருவரையும் அமைதியுறச் செய்த பின்னர்; இருந்து அறமுரைக்கும்-அதன்மேலமர்ந்து அவ்விருவருக்கும் தமது அறத்தைச் செவியறிவுறுத்தியருளிய; பொருவு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் தரும் பீடிகை தோன்றியது-ஒப்பற்ற சிறப்புண்மையாலே மேலோர் வாழ்த்தி வணங்குகின்ற அத் தரும பீடிகை மணிமேகலை கண்ணிற்குப் புலப்படுவதாயிற்று; என்பதாம்.

(விளக்கம்) நாவலந் தீவிற்குக் கிழக்கே கடலினூடமைந்த நாக நாட்டை ஆட்சி செய்யும் இருவேறு மன்னர் என்க. தீவு; தமக்கே உரியதாகலின் அதன் கண்ணமைந்த மாமணிப் பீடிகையும் எமக்கே உரியதாம் என்று உரிமை கொண்டாடி எடுக்க முயன்று இயலாமையால் தம்முடைய தென்னும் உரிமையை நிலைநாட்ட இருவரும் படை கூட்டிப் பெரும்போர் செய்தனர் என்பது கருத்து.

அவர் போரை ஒழித்து அவ்வரசர்க்கு அதன் மேலிருந்து புத்தர் தாமே அறமுரைத்தலாலே அப் பீடிகை பொருவறு சிறப்புடையதாயிற் றென்க.

மற்று அவ்வரசர் அதனைக் கண்டபோது அவர்க்கு அவர்தம் பழம் பிறப்புணர்ச்சி வாராமைக்குக் காரணம் அவர் உள்ளம் அன்பிற்படாது அவாவின்பாற் பட்டிருந்தமை என்க. அன்றி, புத்தன் எழுந்தருளித்தன்மேலமர்ந்து அறமுரைத்த பின்னரே அப் பீடிகைக்கும் அவ்வாற்றல் வந்துற்றதென்க கோடலுமாம்.

பற்று- பொருள்களின்பால் பசைஇய அறிவு. இருஞ்செரு- பெரும்போர். பெருந்தவ முனிவன்: புத்தன். உலகிலுள்ள பிற புத்த பீடிகைகளுக்கு முற்பிறப்புணர்த்தும் ஆற்றலின்மையின் பொருவது சிறப்பின் தரும்பீடிகை என அதன் தனித்தன்மையை விதந்தோதினர்.

இதன் இக் காதையை- ஈங்கு இவள் இன்னணமாக, மணிபல்லவத் திடை நறுமலர்ப் பள்ளித் தூங்கு துயில் எழூஉம் அஞ்சில் ஓதி, காணாள் கண்டு, முளைப்பச் சுதமதி துயரஞ் செய்தனை அறியேன் மாற்றம் தாராய் மாதவி மயங்கும் அகன்றனையோ மடவாள் செய்தனள் கொல்லோ அஞ்சுவன் வா எனத் திரிவோள் காணாள் வீழ ஏங்கி உறுவோள் உள்ளி அழுவோள் முன்னர்ப் பீடிகையாகிய ஆசனம், முனிவன் அறமுரைக்கும் அத் தரும் பீடிகை தோன்றியது என இயைத்திடுக.

மணிபல்லவத்துத் துயருற்ற காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar