கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், திரவுபதியம்மன் கோவில் வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நடந்தது. கிருஷ்ணகிரியில், சென்னை சாலையில் உள்ள திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த விழா, 10ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 18 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. 13 நாட்கள், கோவில் வளாகத்தில், மகாராஜகடை திருமலை நாடக சபாவினரின் மகாபாரத நாடகம் நடந்தது. நாடகத்தின் இறுதி நாளான நேற்று, 18ம் நாள் போர் குறித்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, காலை, 10:00 மணிக்கு நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். மாலை, 6:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம், தீ மிதி விழா நடந்தது.