கடலுார்: பாதிரிக்குப்பம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடலுார், பாதிரிக்குப்பம் சித்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 27ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜையை தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், ரத்தின ஸ்தாபனம், சுவாமிகள் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. நேற்று காலை 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து நாடி சந்தானம், யாத்ராதானத்தை தொடர்ந்து காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.