பழநி: பழநி முருகன்கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா நாளை (ஜூன் 1) கொடியேற்றத்துடன் துவங்கி ஜூன் 10 வரை நடக்கிறது. வசந்த உற்சவவிழா எனப்படும், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, நாளை காலை 11:00 மணிக்கு மேல் பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடக்கிறது. மலைக்கோயிலில் பகல் 12:00 மணி உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதல் நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம்நாள் (ஜூன் 6ல்) முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. ஏழாம்நாள் (ஜூன் 7ல்) மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4 மணி நடை திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயில் தேர்நிலையில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பாடாகி நான்குரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். ஜூன் 10ல் கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறும். பத்துநாள் திருவிழாவில் சுவாமி தங்கமயில், வெள்ளி காமதேனு, தங்கக்குதிரை உள்ளிட்ட, வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.