ராமானுஜர் கோவிலில் பூஜை நிறுத்தம்: பக்தர்கள் புகார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2017 01:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில், ராமானுஜருக்கு தனி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரதராஜப்பெருமாள் கோவில் பராமரிப்பில் இருந்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை அனுஷ்டான குளம் உற்சவத்திற்கு வரதராஜப்பெருமாள் அந்த கோவிலில் எழுந்தருள்வார். அதன் பின் அந்த கோவில் எந்த வித பூஜையும் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது பக்தர்கள் சார்பில் மாதம் தோறும் திருவாதிரை சிறப்பாக நடை பெறுகிறது. ராமானுஜர், ஆயிரமாவது ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. சில மாதத்திற்கு முன் இதே போல் தினசரி பூஜை நிறுத்தப்பட்டது. அது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, மீண்டும் தினசரி பூஜை துவங்கியது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும், தினசரி பூஜை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மிகவும் வருத்தம் அடைந்து உள்ளனர். கோவில் திறந்திருக்கும் என நினைத்து வரும் வெளியூர் பக்தர்கள், ஏமாற்றம் அடைகின்றனர். தினசரி பூஜை மீண்டும் நடத்த , கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ராமானுஜர் பக்தர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.