பதிவு செய்த நாள்
16
ஜூன்
2017
12:06
பரமக்குடி: பரமக்குடி அருகே மஞ்சூர் ஊரணி துார்வாரும் பணியின் போது பழங்கால சுவாமி சிலைகள் உடைந்த நிலையில் மீட்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக அனைத்து ஊரணிகளையும் துார்வாரும் பணி நடந்து வருகிறது. இதன்படி பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் உள்ள பிடாரிபாகம் ஊரணி துார்வாரும் பணிகள் நேற்று முன்தினம் நடந்தது. இந்ந ஊரணியானது சிவன் கோயில் அருகே உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் பணி நடந்த போது, பாறைகள் மோதிய சப்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து மணல் அள்ளிய போது சிவலிங்கம், அம்மன், முருகன், நந்தி சிலைகள் என உடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.
இது குறித்து வி.ஏ.ஓ., மலைராஜ் தகவலின் பேரில் அங்கு வந்து பார்வையிட்டார். இதனையடுத்து நந்தி சிலை மட்டும் பரமக்குடி தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்த கிராம மக்கள் தெரிவித்த போது: துார்வாரும் பணியின் போது அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை. இதனால் குறிப்பிட்ட அளவை விட சவடு மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை நடக்கிறது. மேலும் கோயில் அருகில் உள்ள ஊரணிகளில் பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய சுவாமி சிலைகள், புராதன சின்னங்கள் கிடைத்து வரும் நிலையில் அவற்றை சேதமின்றி மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். தாசில்தார் ராஜகுரு கூறிய போது: மஞ்சூரில் கிடைத்த சிலைகள் அனைத்தும் உடைந்த நிலையில் மீட்கப்பட்டதால், அவை மீண்டும் அந்த ஊரணியிலேயே புதைக்கப்பட்டுள்ளன, என்றார். அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறிய போது: பொதுவாக முந்தைய காலங்களில் கோயில்கள் புதுப்பிப்பு பணியின்போது பின்னமான சிலைகளை ஆறு, குளம், ஏரி, கடல்களில் புதைத்து வைப்பது வழக்கம். இது போன்றவைகள் நல்ல நிலையில் இருந்தால் பாதுகாக்கப்படும், என்றார்.