பதிவு செய்த நாள்
19
ஜூன்
2017
02:06
சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாசப் பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சென்னை முகப்பேர், வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ளது, சந்தான சீனிவாசப் பெருமள் கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவை முன்னிட்டு, இன்று காலை, 6:00 மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. உற்சவ கோலத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மூன்றாம் நாள் விழாவான, ஜூன் 21ம் தேதி, கருட சேவை உற்சவம் நடக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் அனுமந்த வாகன, சேஷ வாகன புறப்பாடு, பல்லக்கு, நாச்சியார் திருக்கோலம், யாளி மற்றும் யானை வாகன புறப்பாடு நடக்கிறது. ஏழாம் நாள் விழாவான, ஜூன் 25ம் தேதி, காலை, 7:00 மணிக்கு தோளுக்கினியான் புறப்பாடு நடக்கிறது. ஜூன் 27ம் தேதி நடக்கும் ஒன்பதாம் நாள் திருவிழாவில், பல்லக்கு ஏகாந்த சேவை, தீர்த்தவாரி, புஷ்ப பல்லக்கில் பெருமாள் மற்றும் நாச்சியார் புறப்பாடு நடக்கிறது. விழாவின் கடைசி நாளான, ஜூன் 28ம் தேதி, காலை, 8:00 மணி முதல் திருமஞ்சனம், கேடயம் பெருமாள், நாச்சியார் புறப்பாடு நிறைவடைந்து, இரவு, 9:30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.