பதிவு செய்த நாள்
22
ஜூன்
2017
10:06
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆனி மாத கிருத்திகை விழாவில், பொது வழியில், மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஆனி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மூலருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சாயரட்சை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தொய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிருத்திகை விழாவையொட்டி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைகோவிலுக்கு வந்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். பொது வழியில், மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.இதே போல், சத்திய சாட்சி கந்தன் கோவிலில், நேற்று, ஆனி கிருத்திகை விழாவையொட்டி, காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, உச்சி கால பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.இந்த விழாவில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை வழிபட்டனர்.