மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி ஆலங்குளத்தில் திருவேலுடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு 3 வருடங்களுக்கு ஒரு முறை குதிரை எடுப்பு திருவிழாவை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கொண்டாடி வந்தனர்.இந்நிலையில் கடந்த 40 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த குதிரை எடுப்பு திருவிழாவை இந்த வருடம் சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஊர் கூட்டத்தில் முடிவெடுத்தனர். இதற்காக கிராம மக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊரில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் திருவேலுடைய அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை,,அலங்காரம் நடைபெற்றன. நேற்று காலை 11:00 மணி அளவில் மேற்கண்ட கிராமங்களிலிருந்து மயிலாட்டம்,மாடுஆட்டம்,மேளதாளங்களுடன் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மானாமதுரைக்கு ஊர்வலமாக வந்து குதிரை,மாடுகள்,சுவாமி சிலைகள், குழந்தை பொம்மை ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜை செய்து தோளில் துாக்கி சென்றனர். மானாமதுரை சோணையா கோவில்,தேவர் சிலை, உடைகுளம்,கல்குறிச்சி வழியாக நடந்து சென்று ஆலங்குளத்தில் உள்ள திருவேலுடைய அய்யனார் கோவில் முன்பாக இறக்கி வைத்து சிறப்பு பூஜைகளை செய்தனர்.